புதன், 24 ஆகஸ்ட், 2011

யாரையாவது பொதுமக்கள் பிடித்தால் அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவும்.கோட்டாபய ராஜபக்ஷ

பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பது கட்டுக்கதை: கோட்டாபய
"துட்டகைமுனுவின் வாளை எடுப்பதற்காகவோ, பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு ஜனாதிபதிக்கு பூஜை செய்வதற்காகவோ கிறீஸ் மனிதனை அரசாங்கம் உலாவ விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கதைகள் முற்றிலும் கட்டுக்கதைகளே ஆகும்.
விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்கடித்த இராணுவத்தால் எதையும் சாதிக்க முடியும். எனினும் கிறீஸ் மனிதன் விடயத்தில் இராணுவம் பொறுமையாக செயற்படுகின்றது. அதை பொதுமக்கள் இலாபமாக பயன்படுத்த கூடாது" என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

"பொதுமக்கள் இராணுவ முகாம்களை சுற்றிவளைப்பதை அனுமதிக்க முடியாது. இதுவரை இரண்டு தடவைகள் பொதுமக்களினால் இராணுவ முகாம்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் உள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.
'கிறீஸ் மனிதன்' தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடி போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத இரவு நேர தொழுகைகளுக்கு பயப்படாமல் செல்லுங்கள். இதற்கு தேவையான பாதுகாப்பினையும் வழங்குமாறு நேற்று இரவு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 'கிறீஸ் மனிதன்' விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கோ பொலிஸாருக்கோ எந்த தொடர்புமில்லை.

அவசர கால சட்டத்தை நீடிப்பதற்காகவோ, மூதூர் பிரதேசத்தில் துட்டகைமுனுவின் வாளை எடுப்பதற்காகவோ, பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு ஜனாதிபதிக்கு பூஜை செய்வதற்காக கிறீஸ் மனிதனை அரசாங்கம் உலா விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கதைகள் முற்றலும் கட்டுக்கதைகளே ஆகும்.
அவசர கால சட்டத்தை நீக்குபவரும் ஜனாதிபதியே. அமுல்படுத்துபவரும் ஜனாதிபதியே. வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து அவசர கால சட்த்தை நீக்க வேண்டிய நோக்கம் ஜனாதிபதிக்கு ஒரு போதும் இல்லை.
பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு ஜனாதிபதிக்கு பூஜை செய்ய வேண்டுமென்றால் என்னுடைய இரத்தத்தின் மூலமே பூஜை செய்ய முடியும். காரணம் நான் மாமிசம் சாப்பிடாதவன்.

கிறீஸ் மனிதன் என்று யாரையாவது பொதுமக்கள் பிடித்தால் அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவும். அதை விடுத்து விட்டு சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். இது பாரிய குற்றமாகும். இவ்வாறு செய்பவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்.

இந்த கிறீஸ் மனிதன் தொடர்பில் ஒரு பொலிஸாரும் இரு அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலை புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சில இயக்கங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இராணுவமும் பொலிஸாரும் இந்த விடயத்தில் மிக நேர்மையாக செயற்படுகின்றது.
கிண்ணியா பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டமைக்கு அங்குள்ள மக்களே பிரதான காரணமாகும். அவர்களின் செயற்பாடுகளினாலேயே அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிண்ணியாவில் இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் போது பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி பொதுமக்களினால் சுற்றி வளைக்கப்பட்டார். இது பாரிய தவறாகும்.
குறித்த பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி நினைத்திருந்தால் குறித்த கூட்டத்தை இராணுவ முகாமில் நடத்தியிருக்கலாம். எனினும் அவர் மக்களை தேடி சென்றார். இதன்போதே அவர் சுற்றி வளைக்கப்பட்டார். இதற்கு பிண்ணனியிலிருந்த குற்றவாளிகளை காண்பித்தால் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய முடியும் என்றார்.

பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் அழைப்பிற்கினங்க அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முபாரக் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் தலைமையிலான குழுவினருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில், கிறீஸ் மனிதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது
இதனையடுத்தே பாதுகாப்பு செயலாளரிற்கும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான இன்றைய சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்றைய சந்திப்பில் முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிவாசல்கள் சம்மேளன  பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் மாவட்ட கிளை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்
.
- தமிழ்மிரர் -

கருத்துகள் இல்லை: