வியாழன், 25 ஆகஸ்ட், 2011

நீதிபதியுடன் ஜெயேந்திரர் 'பண பேர' பேச்சு.கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

சென்னை:புதுச்சேரி செஷன்ஸ் நீதிபதி ராமசாமியுடன், பண பேரம் குறித்து ஜெயேந்திரர் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணையை நடத்த புதுச்சேரி கோர்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீதான சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், செப்டம்பர் 5ம் தேதி இறுதி விசாரணை நடைபெறவிருந்தது. இந்த நிலையில் சுந்தரராஜன் என்ற வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், சங்கராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராமசாமியுடன், ஜெயேந்திரர் பேசியுள்ளார். இதுதொடர்பான ஆடியோவை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த ஆடியோ உரையாடலில் ஜெயேந்திரர், அவரது உதவியாளர் கெளரி என்ற பெண், இன்னும் இருவர் ஆகியோர் பேசியுள்ளனர். அதில் இன்னும் ஒரு வாரம், பத்து நாட்களில் மீதமுள்ளவற்றையும் கொடுத்து விடுகிறேன், அதுவரை பொறுமையாக இருங்கள் என்று ஜெயேந்திரர் கூறுகிறார்.இதன் மூலம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கும், நீதிபதிக்கும் இடையே ஏதோ உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி சுகுணா, இதுகுறித்து விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றத்தின் ஊழல் கண்காணிப்புப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும் அதுவரை சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க புதுவை கோர்ட்டுக்கு இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: