புதன், 24 ஆகஸ்ட், 2011

விஜயகாந்த்:மதில்மேல் பூனையாகவே ஒருவருடம் இருக்கவேண்டியுள்ளது

அதிமுக ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன்- விஜயகாந்த்

சென்னை: அதிமுக ஆட்சி குறித்து இப்போது கருத்து சொல்ல மாட்டேன். ஒரு வருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன் என்று தேமுதிக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த புண்ணியத்தால் எதிர்க்கட்சி வரிசைக்கு தேமுதிக உயர முடிந்தது. இருப்பினும் இதுவரை ஒரு எதிர்க்கட்சியாக அந்தக் கட்சி செயல்படவே இல்லை என்று சர்ச்சை இருந்து வருகிறது. பாமக உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்த் மெளனச் சாமியாக இருந்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக ஆட்சி 100 நாட்களை முடித்துள்ளது குறித்து விஜயகாந்த்திடம் கருத்து கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கு அவர் இப்போது கருத்து சொல்ல மாட்டேன். ஒருவருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.
சட்டசபையிலும், வெளியிலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படுமா என்ற கேள்விக்கு, ஒரு வருடமாகட்டும் சொல்கிறேன் என்று அதே பதிலைச் சொன்னார் விஜயகாந்த்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இப்போது அதுகுறித்து கூற இயலாது என்றார் விஜயகாந்த்.

கருத்துகள் இல்லை: