புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்னா குழுவில் தலித்களுக்கு இடம் தராததைக் கண்டித்து கொடும்பாவி

அன்னா ஹஸாரே தலைமையிலான குழுவில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே இடம் அளித்துள்ளதைக் கண்டித்தும், தலித் பிரதிநிதி யாரும் இடம் பெறாததைக் கண்டித்தும் சென்னையில் ஹஸாரே கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

அம்பேத்கர் தலித் கூட்டமைப்பு சார்பி்ல நடந்த இந்தப் போராட்டத்தின்போது அம்பேதக்ர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து வருகிறார் அன்னா ஹஸாரே.
அவரது தலைமையிலான போராட்டக் குழுவில் ஒரு தலித் சமூகப் பிரதிநிதி கூட இல்லை. அனைவருமே மேல் தட்டு மக்கள்தான். இந்த போக்கைக் கண்டித்து இப்போராட்டம் நடப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவான போராட்டங்கள் பெருமளவில் நடந்து வரும் நிலையில் சென்னையில் ஹஸாரேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிறந்த குழந்தைகளுக்கு அன்னா ஹஸாரே பெயர்:
இதற்கிடையே ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் அன்னா ஹஸாரேவின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா ஹஸாரேவின் பெயர் நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது. நாட்டு தலைவர், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்த மக்கள் தற்போது அன்னா ஹஸாரேவின் பெயரை சூட்டுகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த ரீத்து சிங் என்பவருக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர் அன்னா என்று பெயர் சூட்டியுள்ளார். இதே போன்று கடந்த சனிக்கிழமை கவுசால்பீபீ என்பவருக்கு பிறந்த குழந்தைக்கும் அன்னா என்றே பெயர் வைத்துள்ளனர். இது தவிர டெல்லியைச் சேர்ந்த 2 தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஹஸாரே என்று பெயரிட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 22 குழந்தைகளுக்கு அன்னா, ஹஸாரே ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் 18 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் அடக்கம்.
தன் குழந்தைக்கு அன்னா என்ற பெயரை சூட்டிய சஞ்சய் பட்டேல் என்பவர் கூறுகையில், கடந்தாண்டு எனது மனைவிக்கு குழந்தை பிறந்த போது, மருத்துவமனை பணியாளர்கள் ரூ. 500 லஞ்சம் கேட்டனர். ஆனால் கடந்த வாரம் பிறந்த குழந்தைக்கு யாரும் லஞ்சம் கேட்கவில்லை. அன்னா ஹஸாரேயின் போராட்டத்தால் இது நடத்திருப்பதாக நம்புகிறேன் என்றார்.
மற்றொருவர் கூறுகையில், என் குழந்தைக்கு அன்னா என்ற பெயரை சூட்டியதன் மூலம் அவனும் நாளை இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறவனாக இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கிரண்பேடி உண்ணாவிரதம் இருக்கட்டும்-அன்னாவுக்கு தாக்கரே கடிதம்:
இதற்கிடையே கேஜ்ரிவால், கிரண்பேடி, சிசோடியா உண்ணாவிரதம் இருக்கட்டும் நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று சிவ சேனா தலைவர் பால் தாக்கரே அன்னாவுக்கு வோண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித திறுத்தமும் இன்றி அப்படியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹஸாரே கடந்த 9 நாட்களாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 74 வயதாகும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியும் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அன்னாவுக்கு சிவ சேனா அமைப்பின் தலைவர் பால் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார். அதில் பால் தாக்கரே கூறியிருப்பதாவது,
உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தயவு செய்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். கேஜ்ரிவால், கிரண்பேடி, சிசோடியா ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடரட்டும். 4-10-1996 அன்று பந்த்ராவில் உள்ள எனது வீட்டில் வைத்து என்னை சந்தித்து பேசினீர்கள். அப்போது நாம் ஊழலை எதிர்த்து எப்படி போராடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நீங்கள், சிவ சேனா தலைவர் தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவரால் தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறினீர்கள் என்று அதில் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் ஹஸாரேவின் போராட்டத்திற்கு நாட்டில் பெருகி வரும் ஆதரவு குறித்தும் பால் தாக்கரே எழுதியிருப்பதாக கட்சியின் தலைவரும், பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
ஹஸாரேவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் உண்ணாவிரதம்:
ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னாவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன்படி ஸ்ரீவைகுண்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
அன்ன ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி சவேரியர்புரத்தில் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சவேரியர்புரம் பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் முள்ளக்காடு கிராம காங்கிரஸ் தலைவர் முனியதங்க நாடார் உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: