செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மீண்டும் இளையராஜா பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார்'

 இதுதான் தெலுங்கு திரையுலகில் இன்றைய பேச்சு.
காரணம் அவரது இசையில் வெளிவந்துள்ள ஸ்ரீராம ராஜ்யம் பாடல்கள்தான்!
பிரபல இயக்குநர் பாபு இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பாலகிருஷ்ணா, அக்கினேனி நாகேஸ்வர ராவ், நயன்தாரா நடித்துள்ள படம் ஸ்ரீராம ராஜ்யம்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. பாடல் வெளியாகும் வரை இந்தப் படத்தை தெலுங்கு விநியோகஸ்தர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தமிழ் டப்பிங் படங்களை வாங்க ஆர்வம் காட்டி வந்த விநியோகஸ்தர்கள், ஸ்ரீராமராஜ்யத்தை வாங்க மறுத்தனர்.
ஆனால் பாடல்கள் வெளியாகி இரண்டு நாட்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டன. இந்தப் படத்துக்காக மொத்தம் 16 பாடல்களை போட்டுக் கொடுத்துள்ளார் இளையராஜா. இவை அனைத்துமே ஆந்திராவில் படு பிரபலமாகிவிட்டதால், சிடி, கேசட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதுவரை படத்தை வாங்க மறுத்து வந்த விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்துக்கு அட்வான்ஸ் தந்து வருவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இசைத் தட்டை வெளியிட்டு ஆதித்யா மியூசிக், "நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக தெலுங்குப் பட இசைக் குறுந்தகடுகள் இத்தனை பிரமாண்டமாக விற்பனையாவது மகிழ்ச்சியைத் தருகிறது. இளையராஜா இசைக்காக காத்திருந்த மிகப்பெரிய ரசிகர் கூட்டம் முழு திருப்தி அடைந்துள்ளது ஸ்ரீராமராஜ்யம் பாடல்கள் மூலம்," என்று கூறியுள்ளது.
இந்தப் படத்தின் இசை குறித்து படத்தில் வால்மீகியாக நடித்துள்ள நாகேஸ்வரராவ் கூறுகையில், "இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்று சொன்னபோதே, அதன் வெற்றியை நான் கணித்துவிட்டேன். அவரது இடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு அருமையான பாடல்களைத் தந்த அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.

மீண்டும் முதல் வரியைப் படியுங்கள்... தெலுங்குப் பட உலகினர் சொல்வது நிஜம்தானே!

கருத்துகள் இல்லை: