புதன், 7 ஜூலை, 2010

கண்டனத்திற்குரியது,நீதியரசர்சி சி.வி.விக்னேஸ்வரின் உரை, சிங்கள சகோதரிகளை சிறுமைப்படுத்தியும் - யாழ் இளைஞர்களை கொச்சைப்படுத்தியும்

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரின் உரை உரத்த கண்டனத்திற்குரியது !
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உயர்திரு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கடந்த 24.6.2010ல் யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் தெரிவித்திருந்த நிந்தனைக்குரிய சில கருத்துக்கள் உரத்த கண்டனத்திற்குரியவை.

இந்நிகழ்வில் உரையாற்றியிருந்த ஓய்வுபெற்ற நீதியரசர் அவர்கள், தனது நீண்ட உரையின் இடையில், “ தெற்கிலிருந்து வரைவின் மகளிர்கள் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலை விரிப்பதாகவும் கேள்விப்பட்டேன்” என எந்தவித ஆதாரமுமற்ற அவதூறொன்றை அள்ளியெறிந்திருந்தார். சிங்கள சகோதர மக்களே தென்னிலங்கை மக்கள் அல்லது தெற்கிலிருந்துவரும் மக்கள் என விளிக்கப்பட்டுவருவது பரகசியமானது. இந்தச் சூழ்நிலையில், ஏறத்தாழ கடந்த அரைவருட காலமாக தென்னிலங்கையிலிருந்து வந்து திரும்பும் சிங்கள சகோதர மக்களுக்கு எதிராக - பிரதானமாக கொழும்பை தளமாகக் கொண்டுள்ள தமிழ் இனவாத அரசியல் சக்திகளாலும் - மேட்டுக்குடித் தமிழ் மிதவாதிகளாலும் - தெரிவிக்கப்பட்டுவரும் விசமத்தனமான கருத்துக்களின் தொடர்ச்சியாகவே திருவாளர் விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்களும் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பகைமைகளை மறந்து, இனங்களுக்கிடையில் உறவுகளை விருத்தியாக்கி, சாதி, மத, பால் பேதங்களைக்கடந்து இலங்கை மக்கள்  அனைவரும் சுபிட்சமான ஒரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள சகலரும் ஒத்துழைக்கவேண்டிய ஒரு தருணத்தில், உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிவகித்த ஒருவரிடமிருந்து, ஆண் ஆதிக்க அகம்பாவத்துடன், பெண்களுக்கு எதிராகவும் - சிங்கள சகோதரிகளை   சிறுமைப்படுத்தியும் - யாழ் இளைஞர்களை கொச்சைப்படுத்தியும் - பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இத்தகைய விசமத்தனமான கருத்துக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இனவெறிக்குத் தூபமிடும் இத்தகைய ஆதாரமற்ற அவதூறுளை எந்தவித ஆய்வுகட்கும் உட்படுத்தாது பிரச்சாரப்படுத்துவதில் பங்களிக்கும் குடாநாட்டு பத்திரிகைகளின் பத்திரிகாதர்மத்தையும் நாம் பகிரங்கமாக கேள்விக்குட்படுத்துகிறோம். பெண்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எழுப்புவதிலும், தீர்ப்பதிலும் முந்தியிருக்க வேண்டிய தமிழ் பெண்ணிலைவாதிகளும், தமிழ் பெண்கள் அமைப்புகளும்கூட பாரதூரமான இந்தப் பேச்சுக்குறித்து இதுவரையில் பாராமுகமாய் இருப்பதும்  பலத்த கண்டணத்திற்குள்ளாகவேண்டியதொன்று. 

இத்தகைய விசமத்தனமான பிரச்சாரங்களின் விளைவுகள் மிகவும் விபரீதமானவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளல் அவசியம். அரசியல் ஆதாயங்களைப்பெற, ஆதாரமற்ற பொய்களாலும் புனைவுகளாலும் இனவெறி வாய்க்காலை நிரப்புவது இரத்தக்குளமாய்  பெருக்கெடுத்தோடும் என்பது எமது இறந்தகால வரலாறு என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ளல் வேண்டும்.
யாழ் ஆய்வறிவாளர் அணியம்

YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE

P O Box 165, Jaffna

yarlleague2009@gmail.com

கருத்துகள் இல்லை: