சனி, 13 ஜூலை, 2019

ஸ்டாலின் : மத்திய அரசு பணிகளில் தென்மாநிலத்தவர்கள் சேரக்கூடாது என திட்டமிட்டு செய்துள்ளது தபால்துறை

தினகரன் : சென்னை: தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கணடனம் தெரிவித்துள்ளார்.
தபால்துறை போட்டித் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது. நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுகுறித்து அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தபால்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளின் வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேட்கப்படும். மாநில மொழிகள் இடம்பெறாது. எனவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இனி தேர்வு எழுத வேண்டும். இது முதல் தாளுக்கு மட்டுமே பொருந்தும்.அதே சமயம் இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள், ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழிகளிலும் வழங்கப்படும். இரண்டாம் தாளை மாநில மொழிகளில் தேர்வர்கள் பதிலளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.


ஸ்டாலின் கண்டன அறிக்கை

இந்நிலையில் தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாதா? என்று மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கணடனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தி பேசாத மாநில மக்கள் மத்திய அரசு பணியில் அமர தகுதியானவர்கள் என்று அரசியல் சட்டம் உரிமை வழங்கியுள்ளது என குறிப்பிட்டிருந்தார். அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மத்திய பாஜக அரசு மறந்து விடக்கூடாது என எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படாது என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசியலைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் மகத்துவத்தை போற்றும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியது  பின்வருமாறு :

*தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும் வகையில் உள்ளது.

*மத்திய அரசு பணிகளில் தென் மாநிலத்தவர்கள் சேரக்கூடாது என திட்டமிட்டு தபால் துறை, மாநில மொழிகளை அலட்சியம் செய்துள்ளது.

*மின்சார வாரியத்தில் வடமாநிலத்தவர்கள் வேலையில் சேர அதிமுக அரசை கட்டாயப்படுத்தி விதிகளை மாற்ற வைத்தது பாஜக அரசு.


*சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை: