திங்கள், 8 ஜூலை, 2019

சரவணபவன் ராஜகோபால் இன்று சரண் அடையிவில்லை .. உடல் ஆரோக்கியம் சரியில்லை

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை - உடல்நலத்தை காரணம் காட்டி சரணடையாத ’சரவண பவன்’ ராஜகோபால்tamil.news18.com :சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய அவகாசம் கோரியுள்ளார். உணவுக்குப் பெயர் போன சரவண பவன் உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ராமசாமியின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தோடு, சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று 2001-ம் ஆண்டு கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்குத் தொடர்பாக ராஜகோபால், அவரது மேலாளர் டேனியல் உள்பட 9 பேரை சென்னை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், கடத்தல் வழக்கிலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.


இதை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போன்று ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டையாக அதிகரித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் ராஜகோபால் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு அவர் ஆஜராகவில்லை.
அதே சமயம், ராஜகோபால் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அவரை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என்றும் அவரது தரப்பில் உடல் நலிவை காரணம் காட்டி, சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ராஜகோபால் தரப்பு முடிவு செய்துள்ளனர். 2001 ஆண்டில் தொடங்கிய சாந்தகுமார் கொலை வழக்கின் விசாரணை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர் கதை போல நீள்கிறது.

கருத்துகள் இல்லை: