புதன், 10 ஜூலை, 2019

துரைமுருகன் : அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பல முக்கிய கட்சிகளை தவிர்த்தது ஏன்?

duraimurukanதினமணி ; முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்க நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கட்சிகளை அழைத்தது எப்படி என்பது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கும்,  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் இடையே காரசார விவாதம் நிகழ்ந்தது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில் அதுகுறித்த பிரச்னையை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
துரைமுருகன்: 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைப்பதாகக் கூறினீர்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு என்ன இலக்கணம். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளையும் கூட்டத்துக்கு அழைத்தது எப்படி?.
முதல்வர் பழனிசாமி: உங்களுடைய தலைவர் (மு.க.ஸ்டாலின்) கேட்டுக் கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே பிற கட்சிகளுக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தோம். காவிரி பிரச்னை தொடர்பாக கடந்த முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தபோது காலையில் இருந்து நாள் முழுவதும் கூட்டம் நடந்தது. அனைத்துக் கட்சிகள் எனில் கூட்டத்துக்கு 60 முதல் 70 கட்சிகளையாவது அழைத்திட வேண்டும். கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்படாத சில கட்சிகளையும் அழைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அதன்படியே பிற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்றிருக்க முடியாது. இடஒதுக்கீடு தொடர்பாக நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்பில் தெரிவித்த விவரங்களை கூட்டத்தில் வீரமணி தெரிவித்தார். தேர்தலில் பங்கெடுக்காத அதேசமயம் பொது வாழ்க்கையிலும், சமுதாயப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்போரையும் அழைத்தோம். அதில் எந்தக் குறைபாடும் இல்லை.
துரைமுருகன்: மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கக் கூடிய, ஏற்கெனவே கொண்டிருந்த கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், சிறிய கட்சிகளையெல்லாம் அழைத்துள்ளீர்கள். இவ்வாறு அழைத்து அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்காதீர்கள்.
மு.க.ஸ்டாலின்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திட வேண்டுமென எந்தப் பட்டியலையும் கொடுக்கவில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அவரைப் பாராட்டி அவருக்கு விருது கொடுத்தவர் ஆசிரியர் வீரமணி. எனவே, அவரையும் கூட்டத்துக்கு அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன். ஆனால், பல்வேறு கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திலேயே இதனைத் தெரிவித்திருந்தால் பிரச்னை வேறு மாதிரியாக போய் இருக்கும். இந்தக் கூட்டத்துக்கு முதல்வரே வந்திருக்க வேண்டும்.
ஐ.ஜே.கே, கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றன. ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் உறுப்பினர்களும் வந்திருந்தனர். அவர்களை அழைத்ததை நான் தவறு என்று சொல்லவில்லை, அவர்கள் எல்லோரும் அழைக்கப்படுகின்ற போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகளாக இருந்தவர்கள், இருக்கக்கூடியவர்களும் அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
ஓ.பன்னீர்செல்வம்: இனி இதுபோன்ற கூட்டங்கள் கூட்டப்படும் போது எந்தக் குறைபாடும் இல்லாமல் அனைத்துக் கட்சியினரும் அழைக்கப்படுவர்.
முதல்வர் பழனிசாமி: கூட்டத்துக்கான அழைப்பு அனுப்பும் போதே துணை முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர், துணை முதல்வர் என யார் கூட்டத்துக்கு வந்தாலும் கட்சியினரின் கோரிக்கைகளைப் பரிசீலிப்போம்.  அனைத்துக் கட்சிகள் என்ற அடிப்படையில் 70 முதல் 80 கட்சிகளை அழைத்தால் நம்முடைய பிரதான, விவாதிக்கப்பட வேண்டிய கருத்து நீர்த்துப் போய் விடும்.
அதேசமயம், அங்கீகரிக்கப்படாத சில கட்சிகளையும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கட்சியினரையும் அழைத்தால் அவர்களது கருத்துகளும் வெளிப்பட்டு ஒரு வடிவம் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே அதுபோன்ற கட்சிகளையும் அழைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்றார்.

கருத்துகள் இல்லை: