வெள்ளி, 12 ஜூலை, 2019

ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!

மின்னம்பலம : டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின்  மீண்டும்  முயற்சி!மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
"தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்குப்பின் வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகளில் இரு கழகத்தினரும் தீவிரமாகி விடுவார்கள்.
சட்டமன்றத்தில் திமுகவும் அதிமுகவும் இயல்புக்கு மாறான நெருக்கத்தோடும் கலகலப்போடும் பழகுவது பற்றி விமர்சனங்களும் திமுக தரப்பிலேயே எழுந்தன.
ஒருபக்கம் இப்படி சட்டமன்றத்தில் அதிமுகவோடு அனுசரணையாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே... இன்னொரு பக்கம் இந்த ஆட்சி மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்க திமுக முழுவீச்சில் இறங்கி விட்டதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திமுக எதிர்பார்த்திருந்த நிலையில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மயிரிழையில் தக்கவைத்துக்கொண்டது அதிமுக.

இதையடுத்து திமுக மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினிடம், அதிமுகவில் இருந்து கணிசமான எம்எல்ஏக்கள் வரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்தால் அதிமுக ஆட்சியை எளிதில் அப்புறப் படுத்தி விடலாம் என்று கூறினார்கள். ஆனால் அப்போது ராஜ்யசபா தேர்தல் முடிந்து பார்த்துக் கொள்ளலாம் என ஒரு ஸ்பீட் பிரேக் போட்டு விட்டார் ஸ்டாலின்.
அதன்பின் கடந்த மாதம் ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பு தன்னை சந்தித்த சீனியர் மாசெ க்களிடம் இந்த ஆபரேஷனை ஓ எம் ஜி சுனிலும் செந்தில்பாலாஜியும் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் எதிலும் ஈடுபட்டு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி விட்டு சென்றார் .
ராஜ்யசபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு கடந்த சில நாட்களாக திமுக தரப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
சுனில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுகவின் இளம்புள்ளிகள் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிலேயே சில முறை கூடி ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி விவாதித்திருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல, செந்தில் பாலாஜி கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த சில அதிமுக புள்ளிகளோடு நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதிமுகவில் இருந்தபோது தனக்கு மிக நெருக்கமான அவர்களை மீண்டும் செந்தில்பாலாஜி சந்தித்த நிலையில் எடப்பாடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி திமுகவில் மறுபடியும் பேசப்படுவது அதிமுக தரப்பையும் எட்டியிருக்கிறது.
சட்டமன்றம் வரும் 20 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் திமுக முதல்வர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை இந்தக் கூட்டத் தொடரிலேயே எடுத்துக் கொள்வது பற்றி சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். சபாநாயகர் தனபால் அவ்வாறு உடனே எடுத்துக் கொள்வாரா என்பதும் கேள்விக்குறிதான்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் மீது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே விமர்சனங்கள் எழுந்தன. இதை அறிந்துதான் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜாமணி படத் திறப்பு நிகழ்வில் பதுங்குவது பாய்வதற்கு தான் என்று தன் கட்சியின் நிர்வாகிகளுக்கே ஒரு மெசேஜ் சொன்னார் ஸ்டாலின்.
அந்தப் பாய்ச்சல் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து விட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: