வெள்ளி, 12 ஜூலை, 2019

சௌகார் பேட்டை காதலியை கொன்ற காதலன் .. சயனைட் வாங்கியது கண்டுபிடிப்பு


தந்தி டிவி : சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சுமர் சிங், காஜல் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் அவர்களது காதலை ஏற்காத காஜலின் பெற்றோர், அவருக்கு, வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்,காஜல் சயனைடு குப்பிகளை சாப்பிட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். அவரது காதலன் சுமர்சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், விசாரணைணையை தொடர்ந்து வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் சுமர்சிங்கிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவர், தன் காதலன் சுமர்சிங்குடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், சுமர் சிங்கிற்கு தற்கொலை செய்துகொள்ள விருப்பமில்லை என தெரிகிறது. இருந்தபோதும், காஜல் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்த‌தால், அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார் சுமர்சிங்.அதன்படி, தங்க வியாபாரம் செய்வதாகவும், தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாகவும் கூறி ஆன்லைனில் ஆர்டர் செய்து சயனைடு வாங்கியுள்ளார் சுமர்சிங்.சம்பவத்தன்று காஜலுடன் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியிருந்தபோது, இருவரும் சயனைடை சாப்பிட்டுள்ளனர். காஜல் சயனைடை விழுங்கிய நிலையில், சுமர்சிங், வெளியே துப்பியுள்ளார்.இதை தொடர்ந்து, காஜலை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார்.இதையடுத்து காதலியை கொலை செய்த குற்றத்துக்காக திருவல்லிக்கேணி போலீசார் சுமர் சிங்கை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: