வியாழன், 11 ஜூலை, 2019

குமுதம் இதழ் ..பிற்படுத்தப்பட்டவரால் தொடங்கப்பட்டு.. இன்று "பார்ப்பன ஆதிக்கத்தின் கைகளுக்குள்

அட கூறு கெட்ட "குமுதமே"!
- கருஞ்சட்டை -
'குமுதம்' இதழ் இப்படியொரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்தி மரக்கட்டையை வைத்துப் பொம்மை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வருகின்றார்கள்.
ஊடகங்கள் ஊதிப் பெருக்கி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அத்திவரதரை தரிசித்து விட்டுச் சென்ற செட்டித் தாங்கல் (வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார்களே - இதுபற்றியெல்லாம் இந்தக் குமுதங்களின் கண்களுக்குத் தெரியாதா?
வரதராஜ பெருமாள் கோயில் சன்னதியில் பட்டப் பகலில் கோயில் மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டாரே - அதன் காரணமாக *சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சிறைக்குப் போனாரே - நினைவில்லையா? என்ன செய்தார் வரதராசர்?*
*கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுவதுபோல, ஒரு பிற்படுத்தப்பட்டவரால் தொடங்கப்பட்ட ஒரு இதழ் "பார்ப்பன ஆதிக்கத்தின் கைகளுக்குள் சென்ற நிலையில் பார்ப்பனீயத்தை வளர்க்கும் இதுபோன்ற மூடத்தனங்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.*

*"குமுதத்துக்கும், அத்திமரக் கட்டைக்கும் வக்காலத்து வாங்கும் கூட்டத்திற்கு ஒரே ஒரு சவால். அந்த அத்திமர வரதரை யார் உதவியும் இல்லாமல் ஒரே ஒரு முறை எழுந்து உட்காரச் சொல்லுங்கள் பார்க்கலாம்! சவால்! சவால்!!*
ஒரு பொம்மையை வைத்து இப்படியும் ஒரு பிழைப்பா? வெட்கக் கேடு!
பக்தி என்ற போதையில் சிக்கித் தவிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலேயே, அது தான் உயர்ந்தது என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
*நோயாளிகள் பெருத்து விட்டதால் மருத்துவத்துறை தோற்றுவிட்டது; மருத்துவமனைகளை இழுத்து மூடி விடலாம் என்று சொல்லும் மடையர்களுக்கும் இந்தக் "குமுதம் கூமுட்டைகளுக்கும்" என்ன வேறுபாடு?*
நடந்து முடிந்த தேர்தலில் பக்திமயமான, இராமனைத் துணை கொண்ட பிஜேபி தமிழ் நாட்டில் மண்ணைக் கவ்வியதே! இது எதைக் காட்டுகிறது? தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய *கவிப்பேரரசு மானமிகு வைரமுத்து அவர்கள் ஒரு கேள்விக்கு அழகாகப் பதில் சொன்னாரே! "இது பெரியார் மண்ணா? ஆன்மிக மண்ணா?" என்பதுதான் அந்தக் கேள்வி.*
*"நடந்து முடிந்த தேர்தல் பதில் கூறி விட்டது" என்று அழகாக நளினமாகப் பதில் கூறினாரே கவிப்பேரரசு - அப்பொழுது கூட உரைக்காதா?*
1971 தேர்தலில் 'இராமனை செருப்பாலடித்த' தி.க. ஆதரிக்கிற தி.மு.க.வுக்கா ஓட்டு என்று இந்தக் கூட்டம் அடைமழைப் பிரச்சாரம் செய்ததே - தேர்தல் முடிவு என்ன சொன்னது?
'இராமனை செருப்பாலடித்த' தி.க. ஆதரித்த தி.மு.க. தானே வரலாறு காணாத வெற்றி பெற்றது. 1967 தேர்தலில் 138 இடங்கள் என்றால் இந்த 1971இல் 184 இடங்களில் வெற்றி பெற்றதே!
*"இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது!"* என்று, ராஜாஜி கையொப்பமிட்டு கல்கியில் எழுதினாரே! ஒப்புக் கொண்டாரே!
*நாங்கள் நினைத்தால் ராமன் தலையில் பெரியார் காலடி வைத்து மிதிப்பது போல கார்ட்டூன் போட முடியாதா? நாகரிகம் கருதி அவ்வாறு வெளியிடவில்லை. தலை எழுத்தை நம்பி தாழ்ந்து கிடந்த மக்களின் தலையில் (மூளையில்) பகுத்தறிவு ஒளியூட்டி, தன்மானந் தழைக்கச் செய்த தலைவரை அசிங்கப் படுத்துபவர்கள் தான் அசிங்கப்படுவார்கள். ஆன்மிகம் கல்வி உரிமையைக் கொடுக்கவில்லை, தீண்டாமையை ஒழிக்கவில்லை, தந்தை பெரியாரின் நாத்திகம்தான் இவற்றைக் கொடுத்தது என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு - மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி அடிமைப் படுத்தும் ஆன்மிகத்துக்கு ஆலவட்டம் சுற்றுவது நாட்டை மீண்டும் ஆரியத்துக்கு அடி பணிய செய்வது தானே. கும்பகோணம் மகா மகக் குளத்தில் மகம் முடிந்த நிலையில், அந்தக் குளத்துத் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதன் முடிவை வெளியிட்டாரே நினைவிருக்கிறதா? அந்நீரில் 25 சதம் மலக்கழிவும், 40 சதம் மூத்திரக் கழிவும் இருந்ததாக வெளியிட்டாரே - அவர் என்ன திராவிடர் கழகத்துக்காரரா? மலமும், மூத்திரமும் கொப்பளிக்கும் நீரைக் குடிக்கும் பக்தி முற்றிய மக்கள் அதிகம் என்பதால் அதுதான் அறிவானது - சிறந்தது என்று 'குமுதம்' கூறுகிறதா? என்ன பந்தயம் கட்டுகிறாய்... மலத்தைத் தொட்டுக் கொண்டுதான் சாப்பிடுவேன் என்பவர்களை எது கொண்டு திருத்த? வெட்கக் கேடு!*
*நன்றி : "விடுதலை" நாளேடு 11.07.2019*

கருத்துகள் இல்லை: