செவ்வாய், 9 ஜூலை, 2019

திமுகவின் 4வது வேட்பாளர் .. அதிமுக + பாமகவுக்கு ஸ்கெச் ?

Sherlin Sekartamil.oneindia.com  :  சென்னை: தமிழகத்தில் காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 4 வது வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். 
இதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை அதிமுக 3 இடங்களையும், திமுக 3 இடங்களையும் நிரப்ப முடியும். அந்த வகையில் அதிமுக தங்கள் கட்சியில் இருந்து 2 வேட்பாளர்களையும், பாமகவுக்கு ஒரு இடத்தையும் கொடுத்துள்ளது. திமுகவும் அதுபோல தங்கள் கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்களையும், மதிமுகவுக்கு ஒரு இடத்தையும் கொடுத்திருந்தது. இந்நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே வைகோ மீதான தேசதுரோக வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 
 இதை காரணம் காட்டி அவரது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலையும் உள்ளது. அப்படி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அந்த ஒரு இடத்திற்கான தேர்தல் மட்டும் தனியாக நடைபெறும். 
அப்படி நடைபெறும் பட்சத்தில் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும். அப்படி ஒரு சூழல் வந்தால் அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் நிறுத்தப் படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப் படும் பட்சத்தில் திமுக சார்பில் தற்போது 4 வது வேட்பாளாராக நிறுத்தப்பட்டுள்ள என்.ஆர்.இளங்கோ வெற்றி பெறுவார். 
 
வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அந்த இடத்திற்கு மாற்று வேட்பாளர் என்றால் மதிமுகவில் இருந்தே ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய கூறியிருக்கலாமே என்ற கேள்வி இப்போது இயல்பாகவே எழுகிறது. அதோடு தீர்ப்பு ஓராண்டு சிறை தண்டனை என்பதால் பிரிவு 124(எ)-ன் கீழ் தண்டிக்கப்பட்டதால் தகுதியிழப்பு வராது என்றும் கூறப்படுகிறது. ஆகவே ஸ்டாலின் 4 வது வேட்பாளரை நிறுத்தியிருப்பது யாருக்கு செக் வைக்க என்ற கேள்வியும் இப்போது அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
வேட்புமனு பரிசீலனை தினமான இன்று வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் 4 வது வேட்பாளரும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதாவது அதிமுக ஆட்சி நடந்து முடிந்த இடைத்தேர்தல் மூலம் நூலிழையில் தப்பித்துள்ளது. அதிமுகவில் சற்று முன்னர்தான் ஒற்றைத்தலைமை பிரச்சனை எழுந்து அடக்கப்பட்டுள்ளது. அதோடு தோப்பு வெங்கடாசலம் போன்ற அதிருப்தி எம்.எல்.எ.க்களும் அதிமுகவில் உள்ளனர். 
 
இந்த அதிருப்தி எம்.எல். எ. க்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக மறைமுக முயற்சி மேற்கொண்டது என்றும் அது சில பல காரணங்களால் கைவிடப்பட்டது என்றும் கூறப்பட்டது. அதன் பின்னணியில்தான் திமுக சபாநாயகர் மீது கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திளிருந்தும் பின்வாங்கியது என்று கூறப்பட்டது. 
இந்த நிலையில் இப்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் 4 வது வேட்பாளரை நிருத்தியிருப்பதன் மூலம் அதிமுகவில் ஒரு சலசலப்பு கிளம்பும் என்றே தெரிகிறது. 
 
அதாவது ஆட்சித்தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.எ.க்கள் மட்டுமல்லாது அதிமுக சார்பில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை பிடிக்காத எம்.எல்.எ.க்களும் உள்ளனர். ஆகவே அவர்களும் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாகவும் அதை சரியாக கணக்கிட்டே ஸ்டாலின் 4 வது வேட்பாளரை நிறுத்தியுள்ளார் என்று உடன்பிறப்புகள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை: