புதன், 10 ஜூலை, 2019

டேவிட் ஷுல்மன்.. இஸ்ரேலிய இந்தியவியல் அறிஞர் : தமிழை நான் ஏதோவொரு ஜென்மத்திலிருந்து அறிவேன்

வெந்து தணிந்தது காடு : டேவிட் ஷுல்மன், இஸ்ரேலைச் சேர்ந்த
இந்தியவியல் அறிஞர்; சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழ், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். தமிழின் வரலாற்றைப் பேசும் ‘தமிழ்: எ பயோகிராபி’ நூல் இவர் தமிழுக்கு அளித்திருக்கும் முக்கியமான பங்களிப்பு. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவரான ஷுல்மனுடன் பன்மொழிக்கொள்கை தொடர்பாக உரையாடியதிலிருந்து…
“தமிழின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். தமிழ் பல்வேறு ஊடுருவல்களையும் திணிப்புகளையும் கலாச்சார சந்திப்புகளையும் சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறது. புறத்திலிருந்து வந்த இதுபோன்ற நெருக்கடிகளை தமிழ் எப்படி எதிர்கொண்டது என்பதைக் கூற முடியுமா?”
எல்லா மொழிகளும் சொற்கள், வெளிப்பாட்டு முறைகள், சிந்தனை முறைகள், தொடரியல் அமைப்புகள், சில சமயம் பதவியல் கூறுகள் போன்றவற்றைப் பிற மொழிகளிடமிருந்து உள்வாங்கியிருக்கின்றன. ‘தூய’ மொழி என்ற ஒன்று உலகிலேயே இல்லை. மொழியானது தூய்மை என்பதையே எதிர்க்கிறது.
மொழி எப்போதுமே பல்வேறு கூறுகளின் கலவையாகவே இருக்கிறது. மொழித் தூய்மைவாதம் என்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல; சாத்தியமற்றதும்கூட. துருக்கியில் முயன்று பரிதாபகரமான முறையில் தோல்வியுற்றார்கள், தமிழர்களும் இந்த விஷயத்தில் தோல்வியடைந்திருக்கிறார்கள். மொழிகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதிகப்படியான எண்ணிக்கையில் புதுப்புதுக் கூறுகள் ஒவ்வொரு மொழியிலும் வந்துசேர்கின்றன. அது ஒரு நல்ல விஷயமே. இப்படிச் சொன்னாலும் பெரும்பாலான மொழியியலாளர்கள் கூறியபடி ஒவ்வொரு மொழியும் அதற்கேயுரிய சிறப்புத்தன்மையை, உள்ளமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு மொழியை ஆளும் அதன் உள்வயமான தர்க்கம் புதிதாக உள்ளே வரும் கூறுகள் மீதும் தனது கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. இதற்குப் பிரக்ஞைபூர்வமான முயற்சி தேவைப்படுவதில்லை. இயல்பாகவே நடக்கிறது. தமிழில் கலந்திருக்கும் சம்ஸ்கிருதத்தை ஏதோ அந்நியனைப் போல் பார்ப்பது பிழையானது. எல்லா இந்திய மொழிகளைப் போல் தமிழும் தனது தனித்தன்மையை இழக்காமல் சம்ஸ்கிருதத்திடமிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கடன் வாங்கியிருக்கிறது. இந்தியில் கலந்திருக்கும் சம்ஸ்கிருதச் சொற்களைவிட பேச்சுத் தமிழில் அதிக சம்ஸ்கிருதச் சொற்கள் கலந்திருக்கலாம்.
“ஒரு பக்கம் ஆங்கிலம், இன்னொரு பக்கம் இந்தித் திணிப்பு முயற்சிகள். இத்தகைய சவால் மிகுந்த சூழலில் தமிழின் பலம் என்னவென்று நினைக்கிறீர்கள்? வாழும் மொழியாக தமிழுக்கு எதிர்காலம் இருக்கிறதா?”
நிச்சயமாக, தமிழுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தமிழைச் சுவாசித்து, உணர்ந்து, அதையே சிந்தித்து வாழும் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை அடுத்துவரும் சில தலைமுறைகளில் மாறாது. மிகக் குறைவான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் பழங்குடி மொழிகள் (அமெரிக்கா, நியூ கினியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் உள்ள மொழிகள்) இறந்துகொண்டிருக்கின்றன. தமிழின் நிலை அப்படி இல்லை. அதற்கென்று மாபெரும் வரலாறும் இன்னமும் படைப்பாக்கம் அதிகம் கொண்ட துடிப்புகளும் இருக்கின்றன. அற்புதமான நவீன இலக்கியம், பாடல்கள், கவிதைகள், கதைகள், அட்டகாசமான பேச்சு வழக்கு, வட்டார வழக்குகள் (இது ஒரு நல்ல அம்சமே) போன்றவற்றைக் கொண்டிருக்கும் தமிழின் மீள்தன்மைக்கும் ஆற்றலுக்கும் ஆங்கிலமும் இந்தியும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நான் கருதவில்லை.
“தமிழ் மீது நீங்கள் கொண்டிருக்கும் காதலைப் பற்றிச் சொல்லுங்கள். தமிழுக்கே உரித்தான ஒரு சிறப்பியல்பைப் பற்றிச் சொல்லச் சொன்னால் எதைச் சொல்வீர்கள்?”
தமிழை நான் முந்தைய ஏதோவொரு ஜென்மத்திலிருந்து அறிவேன் என்பதுதான் அதன் மீது நான் கொண்ட காதலைப் பற்றிய சிறந்த விளக்கமாக இருக்கும். இந்த ஜென்மத்தில் நானும் என் மனைவி அய்லீனும் 1972-ல் சென்னைக்கு – அப்போது மெட்ராஸ் - புதுமணத் தம்பதியராக வந்தபோது, தமிழுலகின் எல்லாவற்றையும் நேசித்தோம். முதல் பார்வையிலேயே காதல் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். தமிழின் மந்திரம் போன்ற அற்புதமான ஒலி, இசை, அந்த மக்களின் திறந்த மனது, உணவு, நிலக் காட்சிகள், அவற்றின் தீவிரம், கவிதை, அதன் வெப்பமும் ஈரப்பதமும்கூட, எல்லாமே எங்களுக்கு அற்புதமானவையாகத் தோன்றின, தொடக்கக் கணத்திலிருந்தே. தமிழின் பல்வேறு கூறுகளிலிருந்து அதற்கே மிகவும் உரித்தான ஒரே ஒரு கூறை எடுத்துச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்ப் பேச்சின் இசைத்தன்மையைப் பற்றி, அதன் ஒலியியல்பு, ஒலிநயம் பற்றிச் சொல்வேன். சடசடவென்று ஆற்றொழுக்காக சொற்கள் வந்து விழும் வேகத்தையும் இது உள்ளடக்கும். எல்லா மொழிகளுக்கும் தனித்தன்மை கொண்ட இசையொலிகளும் ஒலிநயமும் உண்டு. தமிழைப் பொறுத்தவரை அதன் ஒலித்தன்மை மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும் முழுக்கவும் உணர்ச்சிகள் நிரம்பியதாகவும் இருக்கிறது. பேச்சுத் தமிழையும் அதன் சொலவடைகள், மரபுத் தொடர்கள் போன்றவற்றையும் கேட்பதே ஆனந்தம். புலனுக்கு இன்பம் தரும் இழைவு இந்த மொழியில் இருக்கிறது, உணர்வு நிரம்பியது அது, அது தமிழின் கூடப் பிறந்த இயல்பு.
நன்றி: இந்து தமிழ் நாளிதழ்

கருத்துகள் இல்லை: