திங்கள், 8 ஜூலை, 2019

நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்.. மாநிலங்கள் அவைக்கு என் ஆர் இளங்கோவும் தாக்கல் ..

மின்னம்பலம் : ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்தமிழக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஜூலை 9) நடக்க இருக்கிறது. மொத்தம் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு திமுக அணியில் மூவரும், அதிமுக அணியில் மூவரும் என ஆறு பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்காக அரசியல் சதி நடந்து வருகிறது என்பதை நேற்று மின்னம்பலத்தில், வைகோவுக்கு எதிரான பாஜகவின் அரசியல் சதி என்ற தலைப்பிட்ட செய்தியில் வெளியிட்டிருந்தோம்.
பாஜகவின் இந்தத் திட்டம் பற்றி திமுகவுக்கும் தெரியவர, இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இறங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து, நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.

“என்னை ராஜ்யசபாவுக்குள் வரவிடக் கூடாதுன்னு அவங்க தெளிவா இருக்காங்க. ஆனா, சட்டப்படி அவங்க என் மனுவை எதுவும் பண்ண முடியாது. ஏன்னா, எல்லா விவரங்களும் அதுல தெளிவா இருக்கு. இந்த தேச துரோக வழக்கு தண்டனைகூட அப்பீல்ல உடைஞ்சிடும்னு வழக்கறிஞர்கள் சொல்றாங்க” என்று வைகோ, ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்.
அதற்கு ஸ்டாலின், “அண்ணே… சட்ட ரீதியா எல்லாமே நமக்கு சாதகமாதான் இருக்கு. ஆனா, அவங்கதான் எந்த எல்லைக்கும் போய் எதையும் செய்ய தயாரா இருக்காங்களே… வேட்பு மனுப் பரிசீலனைங்கிற பேர்ல தேர்தல் ஆணையத்தைக் கையில வெச்சுக்கிட்டு அவங்க என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
அப்போது வைகோ, “அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுச்சுன்னா என்ன செய்யலாம்னு நீங்களே ஒரு முடிவெடுங்க” என்று ஸ்டாலினிடம் சொல்ல இந்த ஆலோசனைக்குப் பின் மீண்டும் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தார் ஸ்டாலின். அதன்பின் ஒரு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை வைகோவின் வேட்பு மனுவை ராஜ்யசபா தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டால், அதையடுத்து அந்த ஓர் இடத்துக்குத் தனியாக தேர்தல் நடத்துவது என்பதே பாஜகவின் திட்டம். அது வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னேற்பாடாக, இன்னொரு வேட்பாளரையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தயாராக வைத்திருக்கிறது திமுக.
ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர் பந்தயத்தில் பேசப்பட்ட திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவை அழைத்த ஸ்டாலின், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். மனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று (ஜூலை 8) என்.ஆர். இளங்கோவும் வேட்பு மனுத் தாக்கல் செய்யத் தயாராகிறார்.
இதன் மூலம் வைகோவின் வேட்பு மனு ஒருவேளை நிராகரிக்கப்படும் பட்சத்தில் திமுகவின் மூன்றாவது வேட்பாளராக இளங்கோ வந்துவிடுவார். அப்போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டே ஆக வேண்டும்.
இன்னொரு பக்கம் வேட்பு மனுப் பரிசீலனையின்போது வைகோவின் தரப்பில் சட்ட ரீதியான அம்சங்கள் உறுதியாக முன்வைக்கப்பட்டுத் தேர்தல் அதிகாரியால் மனு ஏற்கப்பட்டுவிடும்பட்சத்தில், நான்காவது வேட்பாளர் தன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வார்.
எப்படியும் அந்த ஓர் இடத்துக்குத் தனியாகத் தேர்தல் நடத்தி அதிமுக ஆதரவில் தனது நபரை நிறுத்தி ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கலாம் என்று நினைத்த பாஜகவுக்குச் சட்ட ரீதியான செக் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: