
தங்கம் திமுகவில் இணைந்து இரண்டு வாரம் காலம் கடந்துவிட்டது. அமமுக நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டுவந்து தேனியில் இணைப்புக் கூட்டம் நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று விசாரணையில் இறங்கினோம்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, “மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கத்துக்கு நெருக்கமான அமமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தங்கத்துக்கு போன் செய்திருக்கிறார். தங்கம் போனை எடுத்தவுடன் வழக்கமாக நலம் விசாரித்திருக்கிறார் அந்த ஒன்றியச் செயலாளர். அதற்கு சலித்தபடியே, ‘நான் எங்கே நல்லா இருப்பது?’ என்று பதில் சொல்லியிருக்கிறார் தங்கம். ஏன் அப்படி சொல்றீங்க அடுத்து ஆட்சிக்கு வரப்போறது திமுகதான். உங்களை நம்பிதான் நாங்கள்லாம் இருக்கோம். எங்களையெல்லாம் எப்ப கூட்டிட்டுப் போகப் போறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கும் தங்கத்திடமிருந்து சரியாக பதில் வரவில்லை. ‘நான் அவசரப்பட்டு விட்டேன்னு நினைக்கிறேன். நீங்க இங்க வர்றதா இருந்தா யோசிட்டு வாங்க’ என்றுள்ளார்.
ஏண்ணே அப்படி அங்க என்ன பிரச்சினை என்று அவர் கேட்க, முழுவதையும் கொட்டித் தீர்த்துள்ளார் தங்கம். ‘அமமுகவில் இருந்தபோது யானை பலமாக இருந்தது. மீடியாக்களும் ஓயாமல் தங்கம், தங்கம்னு என்ன பத்தி நியூஸ் போட்டாங்க. ஆனால், திமுகவுக்கு போனதிலிருந்து எந்த மீடியாவும் என்னைக் கண்டுகிறதில்ல. அமமுகவுல பணம் வாங்கித்தான் செலவுகள் செஞ்சோம். அங்க மரியாதையும் இருந்தது. ஆனா, திமுகவுல யாரும் மதிக்கமாட்டேங்குறாங்க. தனித் தனிக் குழுவா இருக்குறவங்க என்னையும் தனித்துதான் பார்க்கிறாங்க’ என்று மொத்தத்தையும் கொட்டியுள்ளார்.” என்கிறார்கள்.
இதெல்லாம் வேறு கட்சிக்கு செல்வோருக்கு ஆரம்பத்தில் நிகழும் சங்கடங்கள்தான் பழகப் பழக சரியாகிவிடும் என்று ஒரு பக்கம் அவருக்கு ஆறுதல் சொல்லப்பட்டாலும் திமுக என்னும் ரயிலில் பயணிக்கும் தங்கம், ஸ்டாலினுடன் தொடர்ந்து பயணிப்பாரா என்பதை வருங்காலம் சொல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக