வியாழன், 16 நவம்பர், 2017

ரேஷன் உணவு கிடைக்காததால் பசியில் பெண் மரணம்! உபியில் ... பயோ மெற்றிக் பிரச்சனையாம் .

ஆதார்: பசியில் பெண் மரணம்!
மின்னம்பலம் :உத்தரப் பிரதேசத்தில் ரேஷன் கடையில் உணவுப் பொருட்கள் வழங்க மறுத்ததால் பெண் ஒருவர் பசியில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சகினா (50). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ரேஷன் கடைக்கு கணவர் இஷாக் அகமதுவுடன் சென்று பயோமெட்ரிக்கில் கைரேகை வைக்க முடியவில்லை. ரேஷன் கார்டில் குடும்ப தலைவியாக சகினாவின் பெயர் உள்ளதால், சகினா வந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வழங்க முடியும் என ரேஷன் கடை அதிகாரிகள் இஷாக் அகமதுவிடம் கூறியுள்ளனர். வறுமை சூழலில் இருந்த சகினா பசியால் மரணமடைந்துள்ளார்.
துணை மண்டல நீதிபதி ராம் அக்‌ஷய் நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில், “இஷாக் அகமதுவின் குடும்பம் மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. மத்திய அரசின் அன்யோதயா திட்டத்தின் கீழ் இவர்களின் குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ கோதுமையுடன் அரிசி சக்கரை உள்ளிட்டவை வழங்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், சந்தோஷி குமாரி என்ற 11வயதுச் சிறுமி, பட்டினியால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ரேஷன் பொருட்களை வாங்க ஆதார் அவசியமில்லை. ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கலாம். 1800 212 55 12 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டு ரேஷன் விநியோகம் குறித்த புகார்களை அளிக்கலாம் என ஜார்கண்ட் மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சார்யு ராய் அறிவித்தார். சிறுமி பட்டினியால் உயிரிழக்கவில்லை என்றும், மலேரியா காய்ச்சலால் உயிரிழந்ததாகவும் அம்மாநில முதல்வர் ரகுபார் தாஸ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: