ஞாயிறு, 12 நவம்பர், 2017

ப.சிதம்பரம் : தேசம் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக ஆகிவிட்டது

மோடிக்காக ப.சி. சொன்ன 551ஆவது குறள்!காங்கிரஸ் கட்சியின் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது அக்கட்சி. அந்த வகையில், நேற்று (நவம்பர் 11) தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் இந்திரா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடந்தேறியது. இந்த மண்டபம் ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகிவரும் நடராஜனுக்குச் சொந்தமானது என்பதால் இங்கேயும் ரெய்டுக்கு வருவார்களா என்ற பதற்றம் இருந்தது. ஆனாலும் அப்படி எதுவும் நடக்காததால் நிகழ்வு நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முன் வரிசையில் பார்வையாளராக அமர்ந்திருந்தார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா.

கூட்டத்தில் கடலூர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “இன்றைக்கு இந்தியாவில் பொருளாதாரத்தை எந்த அளவுக்குச் சீரழிக்க வேண்டுமோ அந்த அளவுக்குச் சீரழித்த ஓர் ஆட்சி இப்போது பாஜக சார்பில் நடந்து வருகிறது. பணமதிப்பிழப்பின் மூலம் மக்கள் அடைந்த வேதனைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக தலைவர் சிதம்பரம் அவர்கள் எடுத்துக்கூறுவார்கள்.
அவர் நிதியமைச்சராக இருந்தபோதுதான் கோதுமைக்கு நிகரான விலை நெல்லுக்கு முதன்முதலாக கிடைத்தது. என் தலைமையில் ஒரு விவசாயிகளின் குழு தலைவரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தோம்
அதை நிறைவேற்றி தமிழக விவசாயிகளைக் காப்பாற்றியவர் தலைவர் சிதம்பரம். இன்றைக்குத் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க இது போல எல்லா இடங்களிலும் மக்களைச் சந்திக்க வேண்டும். நிறைய பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும். பஞ்சாப் போல தமிழகத்திலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும்” என்றார்.
திருநாவுக்கரசர் பேசுகையில் அதிமுகவில் இரட்டை இலைக்காக நடக்கும் விவகாரங்களை விரிவாகப் பேசினார்.
“டீ கடை வைத்தால் சி.எம் ஆகலாம் பி.எம் ஆகலாம் என்ற உண்மை அன்றே தெரிந்திருந்தால் வக்கீலுக்கே படித்திருக்க மாட்டேன். உலகின் மோசமான கந்துவட்டிக்காரர் மோடி. 28% வட்டி வசூலிப்பவர். ஜெயலலிதாவின் மரண விசாரணைக் கமிஷனில் முதலில் விசாரிக்க வேண்டியவர் மோடிதான்.
அன்று அதிமுகவையும் எம்.ஜி.ஆரையும் காப்பாற்றியவர் ராஜீவ் காந்தி. இன்று அதிமுகவைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார் மோடி. எனவே, அதிமுகவில் இருப்பவர்களெல்லாம் இப்போது இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ்” என்றார்.
சிறப்புரையாற்றிய ப.சிதம்பரம் பேசுகையில் நேரம் மிகக் குறைவாகவே இருந்தது.
“இந்திரா காந்தியைத் தெரிந்த இந்தத் தலைமுறை காங்கிரஸான நாம், அடுத்த தலைமுறை காங்கிரஸையும் தலைவர்களையும் நம் இல்லத்தில் இருந்தே உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டபோது... ‘கார்த்தி சிதம்பரத்தைத் தலைவராக்கச் சொல்கிறாரோ’ என்று கூட்டத்தில் இருந்து குரல் கேட்டது.
“மக்களுக்குத் தீங்கு செய்ய நினைக்காத தலைவர் இந்திரா காந்தி. இந்தியாவில் இருக்கும் 80 சதவிகித மக்கள் இந்த சிறு, குறு, நடுத்தர தொழில்களை நம்பி வாழ்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எந்தத் தீங்கும் செய்யாதவர் இந்திரா காந்தி.
மோடி கொண்டுவந்த பண மதிப்பழிப்பு என்பது அவர்களைச் சுமார் மூன்று மாத காலத்துக்கு நாயினும் கீழாக அலையவிட்டது. அவர்களுடைய வேதனையும் வலியும் இன்னமும் தீரவில்லை. விளிம்பு நிலை மக்கள் பட்ட பாடு வார்த்தையில் சொல்ல முடியாதது. அந்த வகையில் தீமையை மட்டுமே செய்து பழக்கப்பட்டவர் மோடி. தீங்கு செய்ய வேண்டுமென்ற எண்ணமே இல்லாதவர் இந்திரா காந்தி.
ஆனால், ‘இந்த பணமதிப்பழிப்பை இந்திரா காந்தி செய்திருந்தால் நான் ஏன் இப்போது செய்யப் போகிறேன்’என்று கேட்கிறார் மோடி. எவ்வளவு அநியாயமான வார்த்தை” என்று கோபமாகக் குறிப்பிட்டார் ப.சி.

தொடர்ந்தவர், “இந்த ஆட்சி, ஆட்சிக்கு வந்து ஆறு காலாண்டுகள் ஆகிவிட்டன. முதல் காலாண்டில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஏனென்றால் காங்கிரஸ் திட்டங்களையே தொடர்ந்தார்கள். காங்கிரஸ் திட்டங்களை கைவிட்ட அடுத்த ஐந்து காலாண்டுகளும் தேசம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது தேசம் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக ஆகிவிட்டது. இந்த ஆட்சியைப் பற்றி சொல்ல வேண்டுமானால், திருக்குறளில் 551ஆவது குறள் ஒன்று இருக்கிறது. அதை நான் சொல்லவில்லை. நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.
இந்தியர்கள் எல்லாரும் அறிந்த இந்திரா காந்தி நூற்றாண்டுக்காக இந்த ஆட்சி சிறு பூவைக்கூட எடுத்துக் கொடுக்கவில்லை. ஆனால், தாங்கள் நூற்றாண்டு கொண்டாடிய தீனதயாள் உபாத்யாயாவை இந்தியாவில் யாருக்கும் தெரியவில்லை என்பதை உணர மறுக்கிறார்கள். இந்த நாடே அறிந்த இந்திரா காந்தி புறக்கணிக்கப்படுகிறார். யாருமே அறியாதவர்கள் ஆராதிக்கப்படுகிறார்கள். இதை மக்கள் உணர வேண்டும்” என்று முடித்தார் ப.சி.
நிகழ்ச்சி முடிந்ததும், மோடிக்காக ப.சி சொன்ன 551ஆவது திருக்குறள் என்ன என்று தேடிப் பார்த்தோம். கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் அக்குறட்பா இருக்கிறது.
கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
என்கிறார் திருவள்ளுவர்.
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு, பகை கொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது என்பதே இந்தத் திருக்குறளின் அர்த்தம்.
- ஆரா

கருத்துகள் இல்லை: