வியாழன், 16 நவம்பர், 2017

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!

மின்னம்பலம் :புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) அளிக்க ‘ஆற்றல்’ என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!சென்னை சவிதா மருத்துவ கல்லூரி, சென்னை நைட்ஸ் ரவுண்டு டேபிள் போன்ற 181 அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பின் தொடக்க விழா நேற்று (நவம்பர் 15) நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா கலந்துகொண்டு ‘ஆற்றல்’ அமைப்பைத் தொடங்கிவைத்தார்.
“வாழ்வியல் மாற்றம், உணவுப் பழக்கவழக்கம், மரபணு ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இளைய தலைமுறையினர் மது மற்றும் புகைபழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது” என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்.
டாக்டர் சாந்தா பேசும்போது, “நம் நாட்டில் புற்றுநோய் தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. முன் எச்சரிக்கையாக இருந்தால், பல புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தலாம். 60 சதவீதப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்” என்றார்.
“தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்துகொள்வோருக்கு, அதன் தொடர்ச்சியாக ஆற்றல் அமைப்பின் மூலம் 4 முதல் 6 வரையிலான கதிர் வீச்சு சிகிச்சையும், உணவும் தங்குமிடமும் இலவசமாக அளிக்கப்படும்” டாக்டர் வீரையன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: