திங்கள், 13 நவம்பர், 2017

மோடிக்கு எப்ப சார் நோபல் பரிசு கொடுப்பீங்க ? ஜேப்படிக்கு நோபல் பரிசு !

வினவு.:முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதார நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், தேலருக்கு பொருளாதாரத்துகான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
ரிச்சர்ட் தேலர் என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநருக்கு “நடத்தையியல் பொருளாதாரம்” (behavioural economics) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதற்காக நோபல் நினைவு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.  இவை  சாதாரணர்களுக்கு எட்டாத, பேராசிரியர்களுக்கு மட்டுமே புரிகின்ற விசயங்கள் என்று சிலர் நினைக்கலாம். விசயம் அவ்வளவு சிக்கலானதில்லை.
பல சந்தர்ப்பங்களில் மக்கள் தமது பொருளாதார நலன் குறித்துப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத முடிவுகளை எடுக்கிறார்கள். இருப்பினும், அறிவுபூர்வமாகச்
சரியான முடிவை எடுப்பதாகவே கருதிக் கொள்கிறார்கள். இத்தகைய மக்களை ‘நல்வழிப்படுத்துவது’ எப்படி? என்பதைத்தான் தேலரின் நடத்தையியல் பொருளாதாரம் பேசுகிறது.
உதாரணமாக, ஸ்டேன்லி என்பவர் வார விடுமுறையில் தன் வீட்டுத் தோட்டத்துப் புல்வெளியைச் சீர் செய்கிறார். அந்தத் தூசு அவருக்கு ஒவ்வாமைக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு ஆளை வைத்து இந்த வேலையைச் செய்தால், வெறும் பத்து டாலர்தான் செலவாகும். மருத்துவச் செலவு அதைவிட அதிகமாக ஆகிறது. அக்கம் பக்கம் உள்ள ஒரு பையனை வைத்து அந்த வேலையைச் செய்யலாம்.
அதற்கு 10 டாலர் செலவழிக்க விரும்பவில்லை என்கிறார் ஸ்டேன்லி. பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு 20 டாலர் கொடுத்தால் அவரது தோட்டத்தில் புல் வெட்ட போவீர்களா என்று கேட்டதற்கு, நிச்சயமாக மாட்டேன் என்கிறார் ஸ்டேன்லி. பகுத்தறிவுபூர்வமாகச் சிந்திக்கும் “பொருளாதார மனிதனாக” ஸ்டேன்லி நடந்து கொள்ளவில்லை என்பதுதான் இந்தச் சம்பவத்தில் இருந்து தேலர் கூறவரும் சிக்கல்.
பொதுவாக பொருளாதாரரீதியில் தமக்கு ஆதாயமானதையே நுகர்வோர் தெரிவு செய்கிறார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. குறிப்பாக, வேண்டல்–வழங்கல் அடிப்படையில் சந்தையில்தான் ஒரு சரக்கின் சரியான விலை கண்டுபிடிக்கப்படுகிறது என்பதே முதலாளித்துவப் பொருளாதாரம் கூறும் விளக்கம்.
மக்கள் எல்லா நேரங்களிலும் பகுத்தறிவுபூர்வமாக முடிவெடுப்பதில்லை என்று முதலாளி வர்க்கத்துக்குத் தெளிவுபடுத்தியதுதான் தேலரின் சாதனையாம். 2015 -ஆம் ஆண்டு அவர் அமெரிக்கப் பொருளாதாரவியலாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரு சரக்கின் விலை வேண்டல் – வழங்கல் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதைக் கொச்சைப் பொருளாதாரம் என்று நிராகரிக்கிறது மார்க்சியம். மார்க்சியம் கூறுவது ஒருபுறமிருக்கட்டும். பகுத்தறிவுக்குப் புறம்பான வகையில் மக்களைச் சிந்திக்கத் தூண்டி, வீட்டுமனை விலைகளை உயர்த்தி உருவாக்கப்பட்டதுதான் சப்-பிரைம் நெருக்கடி என்பது முதலாளித்துவ உலகம் முழுவதும் அறிந்த உண்மை.
தாகத்துக்கு கோக் குடிப்பதும்கூட முதலாளித்துவ விளம்பரங்களால் தூண்டப்பட்ட பகுத்தறிவுக்குப் புறம்பான சிந்தனைதான். இவையெல்லாம் தேலர் சொல்லி முதலாளித்துவம் புரிந்து கொண்ட புதிய உண்மைகள் அல்ல. இருப்பினும், முதலாளித்துவ உலகம் தேலரைக் கொண்டாடுவது ஏன்?
தேலரின் நூல்களில் முக்கியமானது “தூண்டு” (Nudge) என்ற நூல். யாரை, எதற்குத் தூண்டுவது? ஆளும் வர்க்கம் விரும்புகின்ற வழியில் மக்களை சிந்திக்கத் தூண்டுவது, நுகர்வோரை வாங்கத் தூண்டுவது, முதலாளி வர்க்கம் விரும்பும் வகையில் தொழிலாளியைச் சேமிக்கத் தூண்டுவது – என்பதே இதற்கான விளக்கம்.
உண்மையில் இது தூண்டுவது அல்ல, திணிப்பது. சப் பிரைம் நெருக்கடி தோன்றிய நாளிலிருந்து உலக முதலாளித்துவப் பொருளாதாரம் தேக்கத்திலிருந்து மீளவில்லை. சுரண்டல் அதிகரிப்பு, ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு சுருங்குதல் போன்ற காரணங்களினால் சந்தைகள் தேங்கிக் கிடக்கின்றன. சந்தையின் தேக்கத்தை உடைப்பது எப்படி, ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்றபடி மக்களைச் சிந்திக்கத் தூண்டுவது எப்படி என்ற கேள்விகளுக்குத்தான் தேலரின் நடத்தையியல் பொருளாதாரம் விடை கூறுகிறது.
தமது சொந்த நலன் குறித்தே கூட ஆழமாகச் சிந்திக்காமல், கொஞ்சம் அசட்டையாக இருக்கும் மக்களை ஏமாற்றிப் பணத்தை ஜேப்படி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார் தேலர். தூண்டுதல் என்ற வழிமுறையைப் பயன்படுத்தித் தனிப்பட்ட ஆதாயம் பார்ப்பது எப்படி என்று ஒரு புத்தகம் எழுதச் சொல்லியிருந்தால், சுமார் 6000 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்கர்களின் பங்குச் சந்தை முதலீட்டை ஏமாற்றிய பிளேடு கம்பெனி அதிபர் பெர்னி மேடாஃப், அப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியும் என்று கூறியிருக்கிறார் தேலர்.
மேடாஃப் -க்கு 150 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தேலருக்கு நோபல் பரிசு. ஏனென்றால், தேலர் தனிப்பட்ட ஆதாயத்துக்காக யாரையும் தூண்டவில்லை. பொது நன்மைக்காக என்று கூறிக்கொள்ளலாம். அந்த பொதுநன்மை எனப்படுவதன் உண்மை முகம் என்ன?
தேலர் கோட்பாட்டின் அடிப்படையில் 2008 -இல் அமெரிக்காவில் ஒபாமா அரசுக்கு கொள்கை ஆலோசனை வழங்க “அதிபரின் சமூக மற்றும் நடத்தை அறிவியல்கள்” குழு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில் “நடத்தையியல் குழு”-வின் ஆலோசனைப்படி பெரும்பான்மை பிரிட்டிஷ் ஊழியர்கள் ஓய்வூதிய நிதியங்களில் இணைக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தாத வரை, சம்பளத்திலிருந்து ஊழியர்களின் பங்களிப்பு பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.
தமது எதிர்காலம் குறித்து அறிவுபூர்வமாக யோசிக்காமலும் அசட்டையாகவும் சோம்பேறித்தனமாகவும் மக்கள் இருப்பதால், இப்படிப்பட்ட “திணித்தல்” அவசியம் என்கிறார் தேலர். பிரிட்டனில் தேலர் கூறும் இந்த “வழிமுறை”யைக் கடைப்பிடித்து, ஊழியர் சேமிப்புத் திட்டங்களின் மூலம் திரட்டப்பட்டிருக்கும் பணம் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது மார்க்கெட் வாட்ச் என்ற ஆய்வு நிறுவனம்.
நம் ஊரில் செல்போன் கம்பெனிகள் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் தலையில் அவர்களுக்கே தெரியாமல் ஏதோவொரு சேவையைக் கட்டி, அதற்காகப் பணத்தைப் பிடிக்கின்றன. அந்த கோக்குமாக்கு சேவையை “வேண்டாம்” என்று சொல்லி நிறுத்த வழி தெரியாமல் நாம் குமுறுகிறோம். பிரிட்டனில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் வழிமுறை இதுதான். சேமிப்புக்கு என் பணத்தைப் பிடிக்காதே என்று சொல்வதற்கு சோம்பேறித்தனப்பட்டோ, அசட்டையாகவோ இருக்கின்ற தொழிலாளிகளின் சம்பளப் பணம் இப்படித்தான் கையாடப்பட்டிருக்கிறது. இது தொழிலாளிகளின் எதிர்கால நன்மை கருதிச் செய்யப்படுவதாகக் கூறுகிறார் தேலர்.
“தொழிலாளர்கள் தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கக்கூடாது” என்று மோடி அரசு உத்தரவிட்டதும், அதை எதிர்த்து பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டு அஞ்சி பின்வாங்கியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
தொழிலாளர்களின் சேமிப்பை முதலாளிகளுக்குப் படையல் வைப்பதற்குச் சதி செய்து மறைத்துவிட்டு, தொழிலாளிகளின் எதிர்காலத்துக்காகத்தான் அப்படி உத்தரவிட்டதாக அப்போது சொன்னது மோடி அரசு. தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்துப் பெரிதும் கவலைப்பட்ட அந்த யோக்கியர்தான், இப்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தைக் குறைத்திருக்கிறார்.
“உனக்கு எது நல்லது என்று எனக்குத் தெரியும்” என்று மக்களிடம் சொல்வதற்கான அதிகாரத்தை ஆளும் வர்க்கத்துக்கு வழங்குகின்றது தேலரின் கோட்பாடு. பணமதிப்பு அழிப்பின்போது மோடி பேசிய டயலாக்கும் இதுதான். பணமில்லாப் பொருளாதாரம் பரவி, ஊழல் ஒழிந்துவிடும் என்று கூறி பணமதிப்பு அழிப்பைப் பாராட்டிய அறிவாளிதான் தேலர். பிறகு, மோடி அரசு 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டிருப்பதை அறிந்து, தனது கருத்தை வாபஸ் வாங்கிவிட்டிருக்கிறார்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று பாராட்டிய அறிவாளிக்கே நோபல் பரிசு என்றால், பணமதிப்பழிப்பைத் திணித்த மோடிக்கு, அதை விடப் பெரிய பரிசல்லவா கொடுத்திருக்க வேண்டும்!
-ஜோசப் ராஜா
-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

கருத்துகள் இல்லை: