ஞாயிறு, 12 நவம்பர், 2017

டெல்லியை முற்றுகை இட்ட செங்கடல் ...தொழிலாளி வர்க்கம், ஊடகங்கள் இருட்டடிப்பு

Su Po Agathiyalingam    :  சேனல்களும் சரி... செங்கோட்டையையே திணறடித்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் செங்கடலைப் பற்றி மூச்சுவிடவில்லை. மூன்று நாட்களும் மூச்சுவிடவில்லை.மகா முற்றுகை
நிறைவேற்று அல்லது வெளியேறு!
அது தில்லி மாநகரின் மையப்பகுதி. நாடாளுமன்றத்திலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தூரம்தான்.கண்ணுக்கெட்டும் தொலைவு வரை ஒரே சிவப்பு.செங்கடல் என்று சொல்லலாம்.36 மணி நேரமும் முழக்கம். இன்குலாப் ஜிந்தாபாத். புரட்சி நீடூழி வாழ்க.தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக. மோடி அரசே வெளியேறு!தில்லியின் அசுத்தம் நிறைந்த காற்றில் உயர் மத்திய தர வர்க்கத்தினர் வாழ்வதற்கு கஷ்டப்படுவது குறித்து பக்கம் பக்கமாக செய்திகளும் கட்டுரைகளும் தீட்டுகிற தில்லி நகரத்து பத்திரிகைகளும் சரி, தேசிய ஊடகங்கள் என்று பீற்றிக் கொள்ளும் செய்திச் சேனல்களும் சரி... செங்கோட்டையையே திணறடித்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் செங்கடலைப் பற்றி மூச்சுவிடவில்லை. மூன்று நாட்களும் மூச்சுவிடவில்லை.மகா முற்றுகை. இந்தி மொழியில் மகா படாவ் என்கிறார்கள்.

இந்திய தொழிலாளி வர்க்கம், மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு அதன் கோட்டைக்கு அருகிலேயே சென்று விடுத்திருக்கிற மிகப் பிரம்மாண்டமான எச்சரிக்கை இது.நவம்பர் 9 காலை துவங்கி 11 மாலை வரை மூன்று நாட்கள் - சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, எச்எம்எஸ், தொமுச உள்பட நாட்டின் அனைத்துமத்திய தொழிற்சங்கங்கள் - இரும்பு, நிலக்கரி, துறை முகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ், மத்திய - மாநில அரசுஊழியர்கள், அங்கன்வாடி மற்றும் சுகாதாரத் திட்டமானஆஷா உள்ளிட்ட திட்ட ஊழியர்கள் - என லட்சக்கணக் கான தொழிலாளர்கள் - நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் - கொட்டும் பனியில் - நடுங்கும் குளிரில் - சுவாசிக்கதகுதியற்ற தில்லி காற்றில் நடத்தி முடித்திருக்கிற மிகப்பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டம் இது.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது போன்ற காட்சிகளை, கடந்த மூன்று நாட்களாக தில்லியின் நாடாளுமன்ற வீதி பார்த்தது.எழுச்சிக் கோஷங்கள். கொட்டு முழக்கங்கள். பறை இசை. நவீன ராகங்கள். விதவிதமான நடனங்கள். வித்தியாசமான பாடல்கள். வீதி நாடகங்கள்.அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் முறைசாரா தொழிலாளி. சாக்கடைக்குள்ளேயே உழல்கிற துப்புரவுத்தொழிலாளி. நித்தமும் வேலை நிச்சயமற்ற கட்டுமானத் தொழிலாளி. தினக்கூலிகள்.
மணிக்கூலிகள். வாரக்கூலிகள் ... மாதாந்திர சம்பளம் பெறும் நடுத்தர ஊழியர்கள்... எனஎல்லோரும் ஒரே குரலாய் - ஒரே அணியாய் - தொழிலாளி வர்க்கமாய் நாடாளுமன்ற வீதியை திணறடித்தார்கள்.முழக்கங்களுக்கிடையே - தலைவர்களது உரை களுக்கிடையே - பல்வேறு மாநிலங்கள், மொழிகள் என எல்லை கடந்து இந்திய தொழிலாளி வர்க்கத்தினிடையே கடந்த மூன்று நாட்களாக நேசமும் தோழமையும் வலுப்பெற்றது. தேசத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை இடைவிடாமல் முன்னெடுத்துச் செல்வதற்கான உத்வேகம் கூடியது. அவரவர் சங்கங்களை இன்னும் வலுவாக எப்படி உருவாக்குவது என கருத்துப் பரிமாற்றங்கள் நடந்த வண்ணம் இருந்தன.12 அம்சக் கோரிக்கைகள் - மூன்று நாட்களும் நாடாளுமன்ற வீதியில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று என மோடி அரசின் செவிப்பறை கிழியும் வகையில் முழக்கங்களும், தலைவர்களின் உரைவீச்சுகளும் அமைந்தன. பொதுத்துறை தனியார்மயம் ஒருபோதும் அனுமதியோம் என ஒட்டுமொத்த தொழிலாளர்களும் உரத்து முழங்கினர்.
குறிப்பாக மத்திய அரசின் திட்டத் தொழிலாளர்கள் - அங்கன்வாடி, ஆஷா போன்ற சுகாதாரத் திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் - அனைவரும் பெண்கள்; மகா முற்றுகையின் முதுகெலும்பாக - மகா முற்றுகையின் உயிர்மூச்சாக - மகா முற்றுகையின் சரிபாதியாக செங்கொடி பிடித்து சிவப்புடை அணிந்து பிரம்மாண்டமாக எழுந்து நின்றார்கள் பெண் தொழிலாளர்கள்.மூன்று நாள் போராட்டத்தின் முடிவில் மத்திய தொழிற்சங்கங்கள் மோடி அரசை எச்சரித்துள்ளன; 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அனைத்து தொழிற்துறைகளிலும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை சந்திக்க தயாராகிக் கொள்ள வேண்டும் என்று.
தில்லியிலிருந்து ஆர்.கருமலையான், ச.வீரமணி
அளித்த தகவல்கள் மற்றும்
நியூஸ் கிளிக், ஐஎன்என் செய்திகளிலிருந்து...
தொகுப்பு. எஸ்.பி.ராஜேந்திரன்,
படங்கள் : வாசுதேவன்(தேசாபிமானி)

கருத்துகள் இல்லை: