திங்கள், 25 செப்டம்பர், 2017

குர்டிஸ்தான் நாளை முதல் தனி நாடாகிறது? சுயநிர்ணய வாக்கெடுப்பு .. Voting begins in historic Kurdistan independence referendum

ஈராக்கிடமிருந்து பிரித்து குரிதிஸ்தானைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான பொது வாக்கெடுப்பு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று (செப்.25) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் நான்காவது மிகப்பெரிய இனக் குழு குர்து இனம். ஈராக்கின் மக்கள் தொகையான 3.70 கோடியில் 15 முதல் 20 சதவிகிதம் வரை இவர்கள் உள்ளனர். எனினும் அவர்களுக்கென்று தனி நாடு இல்லை. ஈராக்கில் குர்து இன மக்கள் வசிக்கும் பகுதி குர்திஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இப்பகுதி செயல்படுகிறது. குர்திஸ்தானைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
எனினும் இந்தக் கோரிக்கையை ஏற்க ஈராக் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குர்திஸ்தானைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான பொது வாக்கெடுப்பு இஸ்ரேல் ஆதரவுடன் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த வாக்கெடுப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல் பாக்தாதி தெரிவித்துள்ளார். பயங்கர பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக்கின் அண்டை நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவையும் இந்த வாக்கெடுப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன. இதனால் பிராந்திய மோதல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவை கருதுகின்றன. மேலும், இந்த வாக்கெடுப்பால் ஈராக் மற்றும் குர்து படைகள் இடையே மோதல் வெடிக்கும். இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைப் பாதிக்கும் என்றும் அவை எண்ணுகின்றன.
ஈராக்கில் குர்து மக்கள் வசிக்கும் பகுதியுடனான தங்களின் எல்லையை ஈரான் அரசு மூடியுள்ளது. துருக்கி அரசும் இந்த வாக்கெடுப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. குர்து பகுதியுடனான எல்லையில் துருக்கியின் ராணுவ ஒத்திகை நடைபெற்றுவருவதாகவும் ஒரே நாள் இரவில் படையெடுக்க முடியும் என்றும் துருக்கி பிரதமர் எர்டோகன் எச்சரித்துள்ளார்.
என்றாலும், ஏராளமான குர்து மற்றும் குர்து அல்லாத மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். நேற்றிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் வாக்குப்பதிவு தொடங்கியதும் உற்சாகமாக வாக்களித்தனர். வாக்கெடுப்பின் முடிவுகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாக்கெடுப்பின் காரணமாக குர்திஸ்தான் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: