புதன், 27 செப்டம்பர், 2017

வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர் என்று நம்பும் பொதுப் புத்தி " ஈழத்தின் ஆதிக்க சாதி...

Kalai Marx : ஈழத்தின் ஆதிக்க சாதியாக உள்ள வெள்ளாளர்கள், ஒரு உள்நோக்கிய சிந்தனை (introvert) கொண்ட சமூகம். அவர்களுக்கென்று சில இரகசியங்கள் இருக்கும். அதை வெளியில் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒன்றில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் அல்லது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
அந்த இரகசியங்களை தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் சொல்ல மாட்டார்கள். இலக்கியங்களில் எழுத மாட்டார்கள். சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த விடயத்தில் சாதிக்குள்ளே இருக்கும் தீவிரவாதிகள், மிதவாதிகள், பழமைவாதிகள், நவநாகரிகவாதிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள்.
ஈழத்து சாதிய சிந்தனைகளில் ஒன்று தோலின் நிறம். சிவப்பாக இருந்தால் வெள்ளாளர்கள், கறுப்பாக இருந்தால் தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம். சமூக விஞ்ஞானப் படி அது உண்மையல்ல. எல்லா வகையான நிறத்தவர்களும், எல்லா சாதிகளிலும் கலந்துள்ளனர். ஆனால், "வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்" என்று நம்பும் பொதுப் புத்தி அந்த சாதியை சேர்ந்த பலரிடம் காணப் படுகின்றது.

இந்த கறுப்பு, வெள்ளை வேறுபாட்டை சிலர் "அறிவியல்" பூர்வமாக நிரூபிக்கக் கிளம்புவார்கள். அதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்பாடு "கேரளா தொடர்பு"! ஏனென்றால், "பொதுவாக மலையாளிகள் சிவப்பானாவர்கள்" என்ற பொதுப் புத்தியும் நிலவுகின்றது. தாம் மலையாளிகளின் வம்சாவளியினர் என்பதாலேயே சிவப்பாக இருப்பதாக பல வெள்ளாளர்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகளே மன்னியுங்கள்.
இங்கே இதை மறுப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மைகள். தனிப்பட்ட முறையில் பலரிடம் அவதானித்த விடயம். கேரளா வம்சாவழித் தமிழர்கள் என்பதை தாமாகவே நேரடியாக தெரிவித்தவர்களும் உண்டு. எனது அனுபவத்தில் கண்ட ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்.
எனக்குத் தெரிந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கிறார். அவருக்கு மலையகத்திலும் உறவினர்கள் உண்டு. "எங்கள் ஊர் மலையகம் என்று சொன்னால், எல்லோரும் குறைந்த சாதியினர் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்..." என்று என்னிடம் சொல்லிக் குறைப்பட்டார்.
"கறுப்பர்களின் தேசத்தில் வாழ்வதற்காக வெட்கப்படும்", சிவந்த தோல் நிறம் கொண்ட அந்தப் பெண்மணி, தனது உயர்சாதிப் பெருமிதத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அந்த அரபு நாட்டில் தன்னுடன் கூட வேலை செய்த கேரளாக் காரரை பிடித்து மலையாளம் பேசக் கற்றுக் கொண்டார். அவர் மலையாளத்தில் சம்சாரிக்கும் பொழுது அடையும் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
இப்படி மலையாள மோகம் கொண்ட பலரை என் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முகநூலில் அறிமுகமான, வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், இந்த "கேரளா தொடர்பை" பற்றி ஆராய வெளிக்கிட்டார். அவர் அரசியலில் குதிப்பதற்கு முந்திய முகநூல் பதிவுகளிலும் கேரளா தொடர்பு பற்றிய பிரமிப்புகள் இருக்கும்.
அது குறித்து என்னுடனும் உரையாடினார். முடிந்தால் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதச் சொன்னார். இப்போது அந்த நண்பர் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதி. வலதுசாரி தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர். ஆகையினால், ஒரு காலத்தில் தன் மனதில் அப்படியான எண்ணம் இருந்தது என்பதையே மறுப்பார்.
நான் ஆரம்பத்தில் கூறிய மாதிரி, இந்த கேரளா கதையாடல் வெள்ளாளர் சமூகத்தினுள் ஆழமாக வேரூன்றி இருக்கும் நம்பிக்கை. அது உண்மையா, பொய்யா என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், சிவப்பு நிறத் தோல் என்ற தொன்மத்தை (Myth) நிறுவுவதற்கு, அவர்களுக்கு கேரளாவை விட்டால் வேறு வழியும் தெரியாது.
உண்மையில் நானும் அந்தக் கதைகளுக்கு ஆதாரம் இல்லையென்று தான் நம்பினேன். நூலகத்தில் இருந்த இலங்கையின் பழைய ஆவணங்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம், அந்தத் தகவல் தற்செயலாக தென்பட்டது. ஒரு காலத்தில், யாழ் குடா நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. எழுபதுகளில், சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் தான் அந்தத் தொடர்பு அறுந்தது. அதாவது, இலங்கை அப்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடைவிதித்து சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்தது.
யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை வலிகாமம் என்று அழைப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் தான் புகையிலை தோட்டங்களும் அதிகம். புகையிலை உற்பத்தியாளர்களில் 90% வெள்ளாள விவசாயிகள் தான். இது ஒன்றும் இரகசியம் அல்ல. அந்தப் பிரதேசத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்கும் யாழ் குடாநாட்டின் பெருமளவு விவசாய நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமானவை.
நீண்ட காலமாக கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த புகையிலை விவசாயிகள், இலங்கை அரசின் தேசியமயமாக்கல் காலகட்டத்தின் பின்னர், தென்னிலங்கையில் மட்டுமே சந்தைப் படுத்த முடிந்தது. அனேகமாக இதற்குப் பின்னர் தான், கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த மலையாளிகளும், தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சாதாரணமான சமுதாய மாற்றம்.
இப்போது எழும் பிரச்சினை என்னவென்றால், ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள், இனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உருவாக்கி, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். "சிங்களவர்கள் எல்லோரும் ஓரினம், தமிழர்கள் எல்லோரும் ஓரினம். இரண்டும் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இனத் தூய்மை பேணி வருகின்றன." என்ற கற்பனையை போதித்து வந்தார்கள்.
இப்போது யாராவது வந்து, "சிங்களவர், தமிழர் தனித் தனி இனங்கள் அல்ல. இரண்டுமே கலப்பினங்கள் தான்" என்று உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது. தாங்கள் இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த பொய் அம்பலமாகிறது என்ற ஆத்திரத்தில் துள்ள மாட்டார்களா?
நிச்சயமாக. அதை மறைப்பதற்காக, "ஈழத் தமிழரை பிரிக்க சதி நடக்கிறது" என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால், "சிவப்பு, கறுப்பு நிற வேறுபாடு" பார்க்கும் கதைகளை, தொடர்ந்தும் தமது சாதிக்குள்ளே மட்டும் இரகசியமாக வைத்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை: