வியாழன், 28 செப்டம்பர், 2017

தமிழக அரசின் மிக முக்கியமான நான்கு வழக்குகள் நவம்பரில் தீர்ப்பு?

மின்னம்பலம : “சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மிக முக்கியமான நான்கு வழக்குகள் இப்போது இருக்கின்றன. 1. திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சட்டசபைக்குள் குட்கா கொண்டுசென்ற விவகாரத்தில் உரிமைக் குழு நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கக் கோரி திமுக போட்ட வழக்கு, 2. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடுத்த வழக்கு, 3. சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், அதைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரித் தொடுத்த வழக்கு, 4. கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அதிமுக கொறடா உத்தரவை மீறிய ஓ.பன்னீர் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு.

இந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்துதான் எடப்பாடி அரசின் ஆயுள் எத்தனை நாளைக்கு என்பது நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் திமுக தரப்பு, டிடிவி தினகரன் தரப்பு ஆகிய இரு தரப்பினரும் இந்த வழக்குகளில் மிக விரைவில் தீர்ப்புகளைப் பெற்றுவிட சட்ட ரீதியான முயற்சியில் இறங்கியிருக்கின்றன. முதல்வர் எடப்பாடி தரப்போ தள்ளிப்போக தள்ளிப்போக அரசின் ஆக்சிஜன் அதிகரிக்கும் என்று நம்புகிறது’’ என்று போஸ்ட் போட்ட ஃபேஸ்புக் அதன் தொடர்ச்சியாக இன்னொரு போஸ்டையும் டைப் செய்தது.
“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடுத்த வழக்கையும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கையும் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி. அதேநேரம் வரும் 30ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரும் கவுண்டர் பெட்டிஷனை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அக்டோபர் 4ஆம் தேதி இறுதி விசாரணை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்த வழக்குகளில் அக்டோபர் 4ஆம் தேதியே தீர்ப்பு கிடைத்துவிடும் என்று திமுகவும், தினகரன் தரப்பும் கருதுகிறார்கள்.
ஒருவேளை ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிட்டதுபோல, அக்டோபர் மாத முதல் வாரத்தில் நீதிபதிகள் மாற்றம் நிகழ்ந்து அதன் மூலம் வேறு நீதிபதி வசம் சென்று மேலும் தாமதமானால் அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி உயர் நீதிமன்ற பெஞ்ச் வசம் இந்த வழக்கைக் கொண்டுசெல்லவும் திமுக திட்டமிட்டிருக்கிறது’’ என்று போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்..
அதை லைக் செய்த வாட்ஸ் அப், “அதிமுக எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று அக்டோபர் 4ஆம் தேதி தீர்ப்பாகிவிட்டால்?’’ என்று ஒரு கேள்வியை முன்வைத்தது.
பதிலை தொடர்ந்து டைப் செய்தது ஃபேஸ்புக்.
“உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அடுத்த கோரிக்கையை எடப்பாடி தரப்பு முன்வைக்கும், இதற்கிடையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் என 39 எம்.எல்.ஏ.க்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாமல் போகும். அப்படி ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், எடப்பாடி அரசு எளிதில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துவிடும்.
அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பு வந்தால், அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கும் மனு விசாரணைக்கு வரும். அப்படி வந்தால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் இணைந்து எடப்பாடி அரசுக்கு எதிராக திமுக வாக்களிக்கும். அந்த சூழ்நிலையில் எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போகும். இதில் திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், நிச்சயம் உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும். அதே நேரத்தில், அரசுக்கு சாதகமாக வந்தாலும், தினகரன் மற்றும் திமுக தரப்பு உச்ச நீதிமன்றத்துக்கு போகும்’’ என்று பதில் கொடுத்தது பேஸ்புக்.
விடாத வாட்ஸ் அப், “உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றால் மாதக் கணக்கில் வழக்கை இழுத்தடித்து தப்பிக்க எடப்பாடி அரசு பல வாய்தாக்களை வாங்க வாய்ப்பிருக்கிறதே?” என்று கேட்டது.
இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதில் டைப் செய்த ஃபேஸ்புக், “எப்படியானாலும் இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக சுப்ரிம் கோர்ட் போவது உறுதிதான். அப்படிப் போகும் பட்சத்தில், இடையில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தீபாவளியை ஒட்டி விடுமுறை வருகிறது. அதன் பிறகுதான் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் 2018ஆம் ஆண்டுதான் சுப்ரீம் கோர்ட் செயல்படத் தொடங்கும். எனவே இந்த வழக்கை விரைவாக நடத்தி தீபாவளி விடுமுறைக்குப் பின் நவம்பர் மாதமே உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பைப் பெற்றுவிட தீவிர சட்டப் போராட்டத்துக்குத் தயாராகிறது திமுக” என்று முடிந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “இந்த வழக்கில் வரும் அக்டோபர் 4-ம் தேதி திமுக தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞருடன் சேர்ந்து தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இது தொடர்பாக, திமுகவில் உள்ள சிலர், தினகரனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். தினகரன் பக்கம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாவை கையிலெடுத்து இருக்கிறது திமுக. ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” என்று மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.

கருத்துகள் இல்லை: