செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஐ நாவில் பாகிஸ்தான் : இந்தியாவில் தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ,பயங்கரத்தை எதிர்நோக்கி உள்ளனர் !

tamithehindu :உலகிலேயே மரணம், மனித விரோதம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் நாடு என்று பாகிஸ்தானை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.வில் கூறியதை எதிர்த்து இந்திய எழுத்தாளர், விமர்சகர் அருந்ததி ராயின் விமர்சனக் கருத்தை மேற்கோள் காட்டி, எடுத்தாண்டு பேசினார் ஐநா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி.
“இந்தியாவில் தற்போது ஆதிக்கம் செலுத்துவது பயங்கரம் மட்டுமே. காஷ்மீர், மற்றும் பிற இடங்களிலும் பயங்கரமே நிலவுகிறது” என்று மலீஹா லோதி அருந்ததி ராயை மேற்கோள் காட்டிப் பேசினார்.
இந்திய அரசியல் பற்றி பேசிய லோதி, இங்கு மதச்சார்பற்றவர்கள் மோடி அரசுக்கு எதிராக எடுத்து வைக்கும் விமர்சனத்தை அப்படியே எதிரொலித்தார். அதாவது இங்கு மோடி மீது பாசிஸ்ட் என்ற விமர்சனமும் உ.பி.முதல்வர் யோகி ஒரு மதவெறியர் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது, இதே நிலைப்பாட்டை லோதி ஐநாவில் எதிரொலித்தார்.
பொதுவாக ஜூனியர் அல்லது நடுநிலை தூதரக அதிகாரிதான் பதில் அளிப்பது வழக்கம் ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் உரை ஏற்படுத்திய தாக்கத்தினால் தூதரக அதிகார மட்டத்தில் உயர்நிலையில் இருக்கும் நிரந்தரப் பிரதிநிதி பதில அளிக்க பாகிஸ்தான் முனைந்தது.

முன்னதாக சுஷ்மா தன் உரையில், பாகிஸ்தான் இந்தியாவுடன் சண்டையிடுவதிலும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுவதிலும்தான் ஆர்வம் கொண்டுள்ளது என்று தாக்கினார்.
இதனையடுத்து லோதி பேசும்போது, “இனமைய, பாசிச கருத்தியல் மோடி அரசில் உறுதியாக உட்சொருகப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.இலிருந்து தலைமை உருவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் (உ.பி) மதவெறியர் ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று இந்திய விமர்சகர்களின் குரலை அவர் மீண்டும் ஒருமுறை எதிரொலித்தார்.
“முஸ்லிம்களைக் கொலை செய்ய அனுமதிக்கும் அரசு” என்று லோதி சாடினார்.
எழுத்தாளர் அருந்ததி ராய் 2015-ம் ஆண்டு கூறிய கருத்தை லோதி மேற்கோள் காட்டினார், “இந்தப் பயங்கரப் படுகொலைகள் நோய்க்கான அறிகுறிதான். வாழ்பவர்களுக்கு வாழ்க்கை நரகமாகி வருகிறது. தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ஆகியோர் பயங்கரத்தை எதிர்நோக்கி வாழ வற்புறுத்தப்பட்டுள்ளனர், தாக்குதல் எப்போது எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலையில் வாழ்கிறார்கள்” என்று லோதி மேற்கோள் காட்டி பேசினார்.
அதே போல் மொகமது அலி ஜின்னா அமைதியும் நட்பும் நிறைந்த ஒரு அயல்நாட்டுக் கொள்கையை வகுத்தெடுத்தார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி கூறியதை சுஷ்மா மறுத்துப் பேசிய போது “ஜின்னா அத்தகைய கொள்கைகளை வைத்திருந்தாரா என்பது கேள்வியே” என்று கூறியிருந்தார்.
சுஷ்மாவின் இந்தக் கருத்தின் மீதும் விமர்சனம் வைத்தார் லோதி.

கருத்துகள் இல்லை: