திங்கள், 25 செப்டம்பர், 2017

பாஜகவின் சாதி அவுட்சோர்ஸ் அரசியல்... கிருஷ்ணசாமி .ராமதாஸ் .சீமான் ....

வினவு :இந்துத்துவ அரசியல் மூலம் பார்ப்பன மேலாண்மையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, சாதிச் சண்டைகளை கிருஷ்ணசாமி, ராமதாஸ் போன்ற பிழைப்புவாதிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு : சாதி அரசியலுக்குத் தூண்டில் !”இந்துத்துவ பண்டாரங்களின் கமண்டல அரசியலை மண்டல் எனும் ஆயுதம் மூலம் வீழ்த்துவோம்!” – சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இவ்வாறு முழங்கின சமூக நீதிக்கட்சிகள். அப்போது அயோத்தியை மையம் கொண்டு சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த பார்ப்பனிய – பனியா இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இடைச்சாதிகளை அணிதிரட்டி நிறுத்துவதன் மூலம் முறியடித்து விடலாம் என இக்கட்சிகள் நம்பின; இன்றளவும் நம்புகின்றன.
எண்பதுகளில் உள்ளூர் அளவில் சிறுசிறு மதக் கலவரங்களை நிகழ்த்தி, வட்டார அளவில் தேர்தல் வெற்றிகளைப் பெறத் தொடங்கியிருந்த பாரதிய ஜனதா, உள்ளூர் மோதல்களை அகில இந்தியாவுக்கும் விரிவுபடுத்தி, அயோத்தி ராமனை முன்வைத்து நாடெங்கும் மக்களை மதரீதியாகப் பிளந்து, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகள் இந்துக்களின் ஐக்கியத்தைக் குலைப்பதாகக் குற்றஞ்சாட்டிய இந்துத்துவ கும்பல், நாடெங்கும் ஆதிக்கசாதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை ஏற்படுத்தியது.

மூன்று பத்தாண்டுகளுக்குப் பின் மிருக பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதா, முன்பு தானே எதிர்ப்பதாகக் கூறிய சாதிவாரி பிரதிநிதித்துவத்தைக் கையிலெடுத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் முறையைப் பரிசீலனை செய்வதற்கான கமிட்டி ஒன்றை அமைப்பதற்கு கடந்த மாதம் 23 -ஆம் தேதி மோடி தலைமையில் கூடிய அமைச்சர்கள் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்து ஒற்றுமைக்கு பதிலாகச் சாதி வேற்றுமை
இட ஒதுக்கீட்டின் பலன்கள் ஏற்றத்தாழ்வான முறையில் சென்றடைவதைப் பரிசீலிப்பது, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பொருளாதார அடிப்படையில் வகைப்படுத்துவது, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான முறைகளை உருவாக்குவது மற்றும் சாதிகளின் உட்பிரிவுகளை முறையான பிரிவுகளில் சேர்ப்பது ஆகிய மூன்று நோக்கங்களுக்காக இந்தக் கமிட்டி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி 12 வாரங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டி அமைக்கப்பட்ட அதே சமயத்தில், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை ஏற்கனவே அனுபவித்த குடும்பங்களை இனம் பிரித்துக் காட்டும் கிரீமி லேயருக்கான அளவுகோலாக இருந்த ஆண்டு வருமானம் 6 இலட்சம் என்ற வரம்பை 8 இலட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 2011 -ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதிரீதியான தரவுகள் இன்னமும் வெளியிப்படாத நிலையில், உள்ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் சாதிகளின் உட்பிரிவுகளைச் சீரமைப்பதாகவும் மோடி அரசு அறிவித்திருப்பதன் நோக்கம் என்ன?
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரசின் ஊழல்களால் மக்கள் வெறுப்புற்று இருந்த சமயத்தில், தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக் கொண்ட மோடி, மக்களின் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்தக் காலகட்டத்தில் தேர்தல் மேடைகளில் மோடியின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால், இந்து மகாசமுத்திரமே பொங்கி எழுந்து இமயமலையை மூழ்கடித்துவிடும். மக்கள் அசந்த நேரமாகப் பார்த்து தேர்தல் வெற்றியை ஜேப்படி செய்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் நம்பிக்கைகள் தகர்ந்து போய், தமக்குத் துரோகமிழைக்கப்பட்டதைக் கண்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல் தொடுத்திருக்கும் மரணத் தாக்குதல், விவசாயத்தில் அழிவு, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், அதிகரித்து வரும் பசு பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சுகாதாரத்துறையின் சீர்கேடுகள், குழந்தைகள் மரணம், அண்டை நாடுகளின் விரோதம்… என நீளுகிறது மோடி அரசின் தோல்விப்பட்டியல். இந்தச் சுமையோடு, இரண்டாண்டுகள் கழித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளது பாரதிய ஜனதா.
மீண்டும் வளர்ச்சி என்ற கோஷத்தை வைத்து ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்துள்ள மோடி – அமித் ஷா இணை, இழிவான சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளது. முப்பதாண்டுகளுக்கு முன் மண்டல் கமிசனை எதிர்த்தபோது இந்து ஒற்றுமை குலைக்கப்படுவதாக சங்க பரிவாரம் அலறியது. உண்மையில் இந்துத்துவாவின் ஆன்மாவே சாதி அரசியல் தான். பாரதிய ஜனதாவின் மதக் கலவர அரசியல் செயல் திட்டம் நேரடியாக பார்ப்பன, பனியா ஆதிக்க சாதி இந்துக்களுக்கே சேவை செய்தது. அக்கட்சி முன்தள்ளும் இந்துப் பண்பாடும் பார்ப்பன மற்றும் மேல்சாதிப் பண்பாடும் வேறு வேறல்ல.
புதிய சாதிய வாக்கு வங்கிகள்
இந்நிலையில் இந்து ஐக்கியம் என்கிற கிழிந்த வேட்டியை அவிழ்த்து எறிந்துள்ள பாரதிய ஜனதா, உட்சாதிப் பிரிவினை மற்றும் இடைநிலைச் சாதிகளை ஒன்றோடு ஒன்று மோத விடும் சாதி அரசியல் என்கிற நிர்வாண நிலையை எய்தியுள்ளது. காபினெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள குழுவுக்கென மோடி பீறாய்ந்து சொல்லியிருக்கும் மூன்று காரணங்களின் வாக்கியங்களிடையே வேறு நோக்கங்கள் மறைந்துள்ளன.
முதலாவதாக, ஏற்கனவே மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்த காங்கிரசை, அதன் உள்ளே வெற்றிகரமாக தள்ளி விட்டுள்ள பாரதிய ஜனதாவுக்கு லாலு, நிதிஷ், முலாயம், மாயாவதி உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் இன்னமும் சவாலாகவே உள்ளனர். அடுத்ததாக, பாரதிய ஜனதாவின் வாக்குவங்கிகளாக இருந்த பட்டேல், ஜாட், லிங்காயத்துகள் உள்ளிட்ட சாதியினர் பரவலாக அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் புதிய சாதிகளை இட்டு நிரப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மேலும், கோமாதா, லவ் ஜிகாத் போன்ற இசுலாமிய வெறுப்பு இந்துத்துவ வெறியைத் தேசிய அளவில் நிரந்தரமாகப் பராமரித்து வருவதும் அதனடிப்படையில் தேர்தல் ஆதாயங்களைத் தொடர்ந்து பெறுவதும் சாத்தியமில்லை என்பதும் பாரதிய ஜனதா அறியாத இரகசியம் அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் குறுக்கே இரத்தக் கோட்டை கிழித்த அயோத்தி ராமன் விவகாரமே நொறுங்கிச் சரிந்த மசூதியின் இடிபாடுகளின் கீழ் நசுங்கிப் போனது. அயோத்தி ராமனால் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியவில்லை என்பதால்தான், கடந்த தேர்தலில் வளர்ச்சி என்கிற கோமாளித் தொப்பியோடு  மேடையேறினார் மோடி.
சாதிரீதியிலான புதிய அணி சேர்க்கை ஒன்றை உருவாக்கி, கரைந்து கொண்டிருக்கும் தனது வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்வது, இதன் போக்கில் பிராந்திய அளவில் தனக்குச் சவாலாக இருக்கும் சமூக நீதிக்கட்சிகளின் ஆதரவுத் தளத்தை ஒழித்துக் கட்டுவது, தனது கார்ப்பரேட் அடிவருடித்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ கோவணத்தில் விழுந்த கிழிசலுக்குச் சாதி அரசியலைக் கொண்டு ஒட்டுப் போடுவது என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கத் திட்டமிடுகிறார் மோடி.
சர்க்கரை என்றெழுதிய காகிதத்தை நக்க போட்டாபோட்டி
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடைநிலைச் சாதிகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. பிற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடைநிலைச் சாதிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தற்காலிக நிவாரணமாக இடஒதுக்கீடு இருந்தாலும், பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக ஒழித்துக்கட்டப்பட்டு தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சொல்லிக் கொள்ளப்படும் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது.
ஏற்கனவே வேலை வாய்ப்புகளை வழங்கும் அருகதை இழந்து, அரசுத் துறைகள் காலிப் பானையாகி விட்ட நிலையில், ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீத இடங்களைத் தனது தேர்தல் நலன்களுக்குத் தோதான சாதிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதே பாரதிய ஜனதாவின் திட்டம். இந்தப் பிரிவினை இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே முறுகல் போக்கை ஏற்படுத்தும்.
வெறும் தாளில் எழுதப்பட்ட சர்க்கரையை நக்குவதற்குப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் மோதலைத் தூண்டி விடுவதன் மூலம், தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதே மோடியின் எதிர்காலத் தேர்தல் உத்தி.
இதை உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தலில் ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்து விட்டார் அமித் ஷா. சுமார் 9 சதவீத யாதவ்களையும் இசுலாமிய வாக்குகளையும் கொண்ட முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு வங்கிக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளான குர்மி, கஹார், கும்மார், நிஷாத் மற்றும் சாஜ்பர் சாதிகளைத் தனக்கு ஆதரவாக வளைத்தது பாரதிய ஜனதா.
அரியானாவில் தனது பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த ஜாட்களுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்த பாரதிய ஜனதா, சிறுபான்மையாக உள்ள பஞ்சாபி கட்டாரி சாதியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டாரை முதல்வராக்கியது. அதே போல் மகாராஷ்டிராவிலும் மராத்தாக்களுக்கு எதிராக இதர சாதிகளை ஒருங்கிணைத்த பாரதிய ஜனதா, பார்ப்பனரான பட்னாவிசை முதல்வராக்கியுள்ளது.
இவ்வாறு பிராந்திய அளவில் எண்ணிக்கை அடிப்படையில் செல்வாக்கோடு இருக்கும் இடைநிலைச் சாதிகளுக்கு எதிராக இதர சாதிகளைத் தூண்டி விடுவதன் மூலம் ஏராளமான ஆதாயங்களை அறுவடை செய்ய முடியும் என பாரதிய ஜனதா கணக்குப் போடுகின்றது. முதலில் இடைநிலைச் சாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்குவதன் மூலம் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது.
அடுத்து, வட்டார அளவில் உமாபாரதி, கல்யாண் சிங் போன்ற சாதிப் பின்புலமுள்ள தலைவர்கள் செல்வாக்கு பெறாமல் தடுப்பது, மாநில அளவில் சுயமான செல்வாக்கில்லாத, திறமையற்ற பொம்மைகளைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் கட்சிக்குள்ளிருந்தே தனக்கு சவால்கள் உருவாகாமல் தவிர்த்துக் கொள்வது எனத் திட்டமிடுகிறது மோடி – அமித் ஷா இணை.
இதன் மூலம் இடஒதுக்கீட்டை நிரந்தரத் தீர்வாகவும், அதுதான் அறுதியான சமூக நீதி என்றும், இந்துத்துவத்துக்கு எதிராக சாதிகளின் ஐக்கியத்தைக் கட்டமைப்பதைத் தமது செயல் திட்டமாகவும் கொண்டிருந்த சமூக நீதிக்கட்சிகளின் இடுப்பில் தொங்கிய துருப்பிடித்த வாளை உருவி, அவர்கள் வயிற்றிலேயே செறுகியிருக்கிறது சங்க பரிவாரம்.
பிளவுபடுத்தும் சாதி ஒன்றுபடுத்த ஒருபோதும் உதவாது

இந்துத்துவ அரசியல் மூலம் பார்ப்பன மேலாண்மையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, சாதிச் சண்டைகளை கிருஷ்ணசாமி, ராமதாஸ் போன்ற பிழைப்புவாதிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிராக இடைநிலைச் சாதிகளிடையேயான நல்லிணக்க அரசியல் பேசி ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்துத்துவத்தின் ஆன்மாவான சாதி என்கிற நிறுவனம் எந்தச் சூழலிலும் கேடாகவே பயன்படுத்தப்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது பார்ப்பன கும்பல்.
தொழில் மற்றும் சமூக ஒடுக்குமுறைகள் காரணமாகத் தீண்டத்தகாதவர்கள் என்று சாதி இந்துக்களால் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் விசயத்தில் சாதி என்பது ஒரு புறவயமான உண்மையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித் உட்சாதிகள் தமக்குள் உயர்வு கற்பித்துக் கொள்வதைப் பொருத்தவரையில், அது அகவயமான மனோபாவமாகவும் இருக்கிறது. அதுதான் பிளவுக்கு அடிப்படையாக அமைகிறது.
பார்ப்பனர் தவிர்த்த சாதி இந்துக்களைப் பொருத்தவரை, சாதி என்பது அநேகமாக, உன்னைவிட நான் மேலானவன்  உன்னிடமிருந்து நான் வேறுபட்டவன் என்று கருதும் அகவயமான மனோபாவமாகவே இருக்கிறது. இவ்வாறு, தன்னுடைய சாதியை உயர்ந்ததாகக் கற்பித்துக் கொள்வதற்கும் சித்தரிப்பதற்கும் புனைவுகளே போதுமானவை. அரசு சன்மானங்களையும் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பிழைப்புவாதிகள், தனது சாதியினரின் எண்ணிக்கையையைச் சொல்வதிலும் புனைவைத் திணித்து கூட்டிச் சொல்கிறார்கள்.
இத்தகைய பிழைப்புவாதிகள் துணையோடுதான் பார்ப்பனியம் அதிகாரத்தில் நீடிக்க முடிந்திருக்கிறது. சாதி அடிப்படையிலான அடையாள அரசியல், பார்ப்பனியத்தின் காலாட்படையாகச் செயல்பட்டு, சாதியமைப்பைப் பாதுகாப்பதற்கும் பார்ப்பன பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்குமே பயன்படும்.
– சாக்கியன்
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

கருத்துகள் இல்லை: