வியாழன், 28 செப்டம்பர், 2017

அமெரிக்கா பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.

விஜய் பக்கிரி : தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வரும் இவ்வேளையில், இங்கு வசிக்கும் பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைத்து, பெரியார்-அம்பேத்கர் ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்கை கோட்பாடுகளை அமெரிக்காவில் பரவச் செய்யும் நோக்கில், அடுத்த தலைமுறைக்குச் சரியான புரிதலோடு கொண்டு செல்வதற்காக கடந்த 14 - ஏப்ரல் -2017 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், தோழர் கொளத்தூர் மணி அவர்கள் முன்னிலையில் பன்முனைத் தொலைத்தொடர்புக் கூட்டத்தின் வாயிலாகத் தொடங்கப்பட்டது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.
இந்த அமைப்பு தொடங்கியதிலிருந்து மாதம் ஒர கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.. இதில் தமிழ் நாட்டிலிருந்து எழுத்தாளர்கள், தலைவர்கள் , சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் பன்முனைத் தொலைத்தொடர்புக் கூட்டத்தின் வாயிலாக, அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிப் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பேசுவதற்கும் புதிய கருத்துகளை அறிந்துகொள்வதற்கும் களம் அமைத்துக்கொடுத்துள்ள இந்த மாதாந்திர பன்முனைத் தொலைத்தொடர்புக் கூட்டமானது அமெரிக்கத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னெப்போதுமில்லாத அளவிற்குப் பெரியார்-அம்பேத்கர் கருத்துகள், கொள்கை கோட்பாடுகள் பெரிதும் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில் இந்த ஆண்டுப் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
இதன் முதல் நிகழ்ச்சியாக, செப்-16 மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஆபர்ன் ஹில்ஸ் நகரில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. ”யார் பெரியார்?”, “ நான் பெரியார் பேசுகிறேன்” ,” பெரியாரின் சமூகப் புரட்சி”, ”பெரியாரின் பெண்ணியம்” முதலான தலைப்புகளில் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்கள் சிறப்பாகப் பேசினர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாகப் பேசியவர்களுக்குப் பரிசுகளும் பட்டயங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் படிப்புவட்ட செயற்பாட்டாளர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் என நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவுக் கருத்துகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுவதாகப் பங்கேற்றோர் கருத்து தெரிவித்தனர். நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், நவோதயா பள்ளிகளைத் திறக்கும் முயற்சியும், மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயல்களும் கைவிடப்படவேண்டும், கருத்துரிமை பாதுகாக்கப்படவேண்டும், விவசாயிகள் பிரச்சினைக்கு உரியத் தீர்வு காணவேண்டும் முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மிச்சிகன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செப்-17 அன்று தொலைத்தொடர்புப் பன்வழியழைப்புக் கூட்டத்தில், அமெரிக்கத் தமிழர்களிடம் சிறப்புரை ஆற்றினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள். அமெரிக்காவில் பெரியார்-அம்பேத்கர் பெயரில் படிப்பு வட்டம் அமைத்து ஒருங்கிணைத்துச் செயற்பட்டு வருபவர்களைப் பாராட்டியதோடு பெரியார், அம்பேத்கர் கருத்துகளின் தேவை, நீட் தேர்வு, இன்றைய சூழலில் திராவிடம் என்ற சொல்லின் பொருள் , தமிழ்த்தேசியம் முதலான பல கருத்துகளைச் சிறப்பாக முன்வைத்ததோடு பலரின் கேள்விகளுக்குப் பொறுமையாகவும், விளக்கமாகவும் விடையளித்துக் கலந்துரையாடினார். பெரியாரியமும் அம்பேத்கரியமும் வெவ்வேறல்ல இரண்டும் ஒன்றுதான், ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கும் சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக்கூயது என்பதையும் வலியுறுத்தினார். எழுச்சித்தமிழர் தலைவருடன் தொலைத்தொடர்புவழியாகப் பேசியமை நல்ல அனுபவமாக அமைந்ததாகவும் இதுபோன்ற கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமெனவும் கூட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
வரும் செப்-23 ஆம் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் மருத்துவர் சோம இளங்கோவன் அவர்களின் முன்னிலையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் "பெரியாரும் பெண்ணியமும்" , "பெரியாரும் தமிழ்மொழியும்" போன்ற பலதலைப்புகளில் அமெரிக்கத் தமிழர்கள் உரையாற்றவிருக்கிறார்கள் . இந்நிகழ்ச்சியில் "என் பார்வையில் பெரியார்" எனும் தலைப்பில் பள்ளி மாணாக்கர்களும் பேசவுள்ளனர்.
இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, இனிவரும் மாதங்களில் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு வழமையான பன்முனைத் தொலைத்தொடர்புக் கூட்டமும் , "புத்தகம் பேசலாம் வாங்க" என்ற தலைப்பில் மாதமொரு புத்தகத்தைப் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும்,. இதற்குப் பொதுமக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் படிப்பு வட்டத்தைச் சார்ந்தவர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.
வாழ்க பெரியார் ! வாழ்க அண்ணல் ! வளர்க பகுத்தறிவு ! ஓங்குக சமத்துவம்
பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம்-அமெரிக்கா

கருத்துகள் இல்லை: