வியாழன், 28 செப்டம்பர், 2017

இரட்டை இலை.. தினகரனுக்கு அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க, தினகரனுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக இரண்டாக பிரிந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகரில் இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால், கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்பட்டது. இதுவரை இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்றுகூறி இரு அணியினரும் லட்சக்கணக்கில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர் அணிகள் இணைந்ததை தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி டெல்லி சென்ற ஒருங்கிணைந்த அதிமுகவினர், அணிகள் இணைந்ததற்கான கடிதத்தை அளித்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால், இரட்டை இலை வழக்கை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதனால் விசாரணையை துரிதப்படுத்திய தேர்தல் ஆணையம். தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது. இதுகுறித்து சசிகலா, பன்னீர்செல்வம், மதுசூதனன், தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 29 ஆம் தேதி வரை அனுமதி வழங்கியது.
இதையடுத்து நாளை ஒருங்கிணைந்த அதிமுக அணிகள் சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
தினகரன் அணியிலிருந்து கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தினகரனின் கோரிக்கையை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு திட்டமிட்டபடி அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: