திங்கள், 28 மார்ச், 2016

170 தொகுதிகளில் தி.மு.க.போட்டி ! கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகள் !

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., உட்பட சில கட்சிகள் உள்ளன. இவற்றில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு, தலா, ஐந்து இடங்கள் என, 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதிக இடங்கள்:புதிய தமிழகம் கட்சியுடன், பேச்சு நடந்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும். இந்தக் கட்சிகளை தவிர, வேறு கட்சிகள் எதுவும், தி.மு.க., கூட்டணிக்கு வருவதாக தெரிய வில்லை. தே.மு.தி.க., வராமல் போனதால், அதிக இடங்களில் போட்டியிட, தி.மு.க.,வுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனும், இன்னும் எண்ணிக்கை முடிவாகவில்லை; இழுபறியில் உள்ளது. எப்படி இருந்தாலும், குறைந்தது, 170 இடங்களில் போட்டியிடுவது என, தி.மு.க., தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள், குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதிகள், மாவட்ட செயலர்களுக்கான தொகுதிகள், பாரம்பரிய தொகுதிகள் என, 170 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விட்டுக்கொடுக்க மறுப்பு:'சிட்டிங்' தொகுதிகளான, திருவாரூர், கொளத்துார், திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி, திருவிடைமருதுார், கும்பகோணம், மன்னார்குடி, லால்குடி, குன்னம், குன்னுார், கூடலுார், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், கம்பம், திருவாடனை, திருப்பத்துார், திருச்சுழி, திருச்செந்துார், பாளையங்கோட்டை, பத்மனாபபுரம், வேப்பனஹள்ளி ஆகிய, 23 தொகுதிகளையும், கூட்டணிகட்சிகளுக்கு விட்டு கொடுப்பதாக இல்லை. கடந்த தேர்தலில், குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில், தோல்வியடைந்த தொகுதிகள் என, 38 தொகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளன.
எழும்பூர், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், செங்கல்பட்டு, சங்கராபுரம், பூம்புகார், செங்கம், பண்ருட்டி, துறையூர், ஈரோடு, தர்மபுரி, கே.வி. குப்பம், திருக்கோவிலுார், சேந்தமங்கலம், நெய்வேலி, ஆரணி, ஊட்டி, தஞ்சாவூர், பேராவூரணி, திருச்சி மேற்கு, தளி, நாகப்பட்டினம். குடியாத்தம், ஆலங்குடி, ஆம்பூர், திருவெறும்பூர், கீழ்பென்னாத் துார், வால்பாறை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மேட்டூர், கீழ்வேலுார், ஆலங்குளம், பழனி, சிவகங்கை, பெரியகுளம், ஸ்ரீவில்லிபுத்துார், நாகர்கோவில் போன்ற தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்காக,சைதாப்பேட்டை, துறைமுகம், பல்லாவரம், ஆவடி, மாதவரம், வீரபாண்டி, சேலம் வடக்கு, அம்பாசமுத்திரம், அருப்புகோட்டை, மடத்துக்குளம், திருச்சி கிழக்கு என, 40 தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்து, தாம்பரம், அண்ணாநகர், கே.கே.நகர்,கன்னியாகுமரி, திருநெல்வேலிஎன, பாரம்பரிய தொகுதிகளாக, 70 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.கூட்டணி கட்சிகளுக்கு விட்டுகொடுத்ததால், தோல்வி யடைந்த தொகுதிகள் எண்ணிக்கையும் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.
உத்தேச பட்டியல்:ஆலந்துார், மயிலாடுதுறை, ராதாபுரம் உள்ளிட்ட, தி.மு.க., மற்றும் வேட்பாளர்களின் செல்வாக்கால் தக்க வைக்கப்பட்ட தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்கப்பட்டதால், தோல்வி ஏற்பட்டது. மொத்தத்தில், 180 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியல் தயாராகி இருப்ப தாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, எப்படியும் குறைந்தது, 170 தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில், தி.மு.க., தரப்பு உறுதியாக உள்ளது. இந்த எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது என அடித்துச் சொல்கிறது, தி.மு.க., வட்டாரம்.- நமது நிருபர் -   தினமலர்.com

கருத்துகள் இல்லை: