
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் மற்றும்
சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு வெளியான நிலையில்,
தமிழகத்தில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று
நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மே 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் இணைந்து
கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள்
நேற்று இரவு வெளியிடப்பட்டன.
அதில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று
மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர்
கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில்
அதிமுக 130 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும் கூறப்பட்டிருந்தது. திமுக 70
தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 34 இடங்களையும் வெல்லும் என கூறியிருந்தது.
மேலும் அ.தி.மு.க.,வுக்கு 39 சதவீத வாக்குகளும் தி.மு.க., கூட்டணிக்கு 32
சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறியது கருத்துக்கணிப்பு.
இந்நிலையில், நியூஸ் நேஷன் என்கிற மற்றொரு செய்தி ஊடகம் நடத்திய கருத்துக்
கணிப்பில் திமுக கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 10000
பேரிடம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு
நடைபெற்றதாக நியூஸ் நேஷன் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவின்படி, திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள்
வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 103 இடங்களிலிருந்து
107 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14
இடங்களிலிருந்து 18 இடங்கள் வரை பெறும் என்றும், மேலும் பாஜக ஒரு தொகுதி
கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள
கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read more at: //tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக