வெள்ளி, 1 ஏப்ரல், 2016

130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது அதிமுக: Times Now டைம்ஸ் நவ்

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக ஒரு அணியாகும், திமுக-காங்கிரஸ் ஒரு அணியாகவும், தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஒரு அணியாகவும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும், அரசியல் கட்சிகள் இடையேயான கூட்டணி குழப்பங்கள் இன்னும் முடிவு பெறவில்லை.  

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. அதிமுக வேட்பாளர்கள் நேர்காணலில் தீவிரமாக இயங்கி வருகிறது. திமுக வேட்பாளர் நேர்காணலை முடித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மட்டுமே முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பது குறித்து கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் தொலைகாட்சி இன்று வெளியிட்டது.
அதில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 39 சதவீத வாக்குகளைப் பெற்று 130 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் 32 சதவீத வாக்குகளைப் பெற்று 70 இடங்களையும், பிற கட்சியினர் (மூன்றாவது அணி) 34 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெறும் 4 சதவீத வாக்குகளை பெறும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு இடமும் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 41 சதவீதமும், திமுகவுக்கு 40 சதவீதமும், பாஜகவுக்கு 5 சதவீதமும், பிற கட்சிகளுக்கு 14 சதவீதமும் ஆதரவு இருந்துள்ளது.
ஆனால், மார்ச் கடைசி வாரத்தில் அதிமுகவின் ஆதரவு 39 சதவீதமாகவும், திமுகவின் ஆதரவு 32 சதவீதமாகவும், பாஜகவின் ஆதரவு 4 சதவீதமாகவும் குறைந்துள்ளது. பிற கட்சிகளுக்கான ஆதரவு மட்டுமே 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தினமணி.com

கருத்துகள் இல்லை: