வெள்ளி, 1 ஏப்ரல், 2016

ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை....ஏனிந்த கொலைவெறி ?

திண்டுக்கல்,மார்ச் 31 (டி.என்.எஸ்) திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேவலமான அரசியல் நடத்துவதாக கூறியுள்ள பிரேமலதா விஜயகாந்த், அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட தேமுதிக சார்பில், தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2 மாதங்களாக திமுக, அதிமுக என்ற கட்சிகள் தமிழகத்தில் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. விமர்சனமாக இருந்தாலும், வாழ்த்தாக இருந்தாலும் விஜயகாந்த் என்ற பெயரை தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியானது, திமுக, அதிமுக கட்சிகளை ஓங்கி அடித்து தமிழகத்திலிருந்து விரட்டுவது உறுதி.
முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவு என பல்வேறு பிரச்னைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால், மக்களுக்கான பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தேமுதிகவை சேர்ந்த ஒரு மாவட்டச் செயலரை, ஆசை வார்த்தைக் கூறி திமுக பக்கம் அழைத்துச் சென்றுள்ளனர். தேமுதிகவினரை பலிகடாவாக மாற்றும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. மே 19ஆம் தேதிக்குப் பின், திமுகவினர் கூண்டோடு தேமுதிக பக்கம் திரும்புவார்கள். அதனால் கேவலமான அரசியல் நடத்த வேண்டாம் என ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். 2016 தேர்தல் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் துணை நிற்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: