ஞாயிறு, 19 டிசம்பர், 2021

டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத.. மாங்காடு மாணவியின் இன்னொரு கடிதம்- முக்கிய தடயம் சிக்கியது

 Shyamsundar -   Oneindia Tamil  :  சென்னை: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாங்காடு மாணவியின் கடிதம் ஒன்று ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் இன்னொரு பாதியும் தற்போது வெளியாகி உள்ளது.
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து அந்த மாணவி மறைமுகமாக இதில் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட அந்த 11 வகுப்பு மாணவி தனது மரணம் குறித்து உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.


அதில் எனக்கு அந்த கனவு வந்து போகிறது.
மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் கூட பாதுகாப்பான இடம் கிடையாது. கருவறையும், கல்லறையும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம்.
"அந்த கனவு வந்து போகுது".. அடிக்கோடிட்டு குற்றஞ்சாட்டிய மாங்காடு மாணவி- தற்கொலையில் முக்கிய குழப்பம் பாலியல் அத்துமீறல்களை நிறுத்துங்கள் என்று கூறி தனது கஷ்டங்களை எழுதி இருக்கிறார். எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை, என்று அந்த மாணவி இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது போலீசார் வசம் சிக்கியுள்ள இன்னொரு கடிதத்தில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து இன்னும் விரிவாக எழுதி உள்ளார்.

அதில், எனக்கு வாழவே பிடிக்கல, இது மோசமான சமூகம். ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். நான் கஷ்டப்பட வேண்டும் என்றே கடவுள் என்னை படைத்து இருக்கிறார். எனக்கு என்னை பார்த்தாலே வெறுப்பாகிறது. படிக்க முடியவில்லை படிக்க முடியவில்லை ச்சீ...என்னோட உடலை யூஸ் பண்றாங்க. என்னால் படிக்க முடியல. அந்த நினைப்பு மண்டையில் ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. வெளியே சொன்னால் என்னைத்தான் தப்பா பாக்குறாங்க. இனிமே யாருமே தப்பான எண்ணத்தில் பெண்களை தொட கூடாது. எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.

மாங்காடு மாணவி முதலில் யாரையும் நம்பாதீங்க. முக்கியமா உறவினர்களை நம்பாதீங்க. யாரு இப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் - பொண்ணுன்னு கூட பார்க்காம - நீ என்னை தொட்டு இருக்கிறாய். கண்டிப்பாக உன்னை சும்மா விட மாட்டேன். உன்னை எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன் என்று சொல்ல கூடாது. நீ இருக்க கூடாது நீ இருக்க கூடாது நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார் என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய கடிதத்தில் உறவினர்கள், பள்ளி என்று எதுவும் பாதுகாப்பு இல்லை என்று அந்த மாணவி குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்த கடிதத்தில் பொண்ணு வயது என்றும் பார்க்காமல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

அதோடு அந்த நபரின் தந்தை ஒரு ஆசிரியர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். "டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாணவியின் உறவினர்களில் ஆசிரியரின் மகன்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்களில் யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதே சமயம் உறவினர்கள் தரப்பு மட்டுமின்றி பள்ளியிலும் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: