வெள்ளி, 24 டிசம்பர், 2021

மாரிதாஸ் மீது 2 ஆவது வழக்கு ரத்து: அதே நீதிபதி உத்தரவு!

 மின்னம்பலம் : யு ட்யூபர் மாரிதாஸ் மீதான மற்றொரு வழக்கும் இன்று (டிசம்பர் 23) மதுரை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மாரிதாஸ் பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிபதிதான் இந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாரிதாஸ் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறந்தது தொடர்பாக பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வழக்கில் மாரிதாஸ் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பிரிவுகள் பொருந்தாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இது வழக்கறிஞர்கள் மத்தியிலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் கூட விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது தப்லிக் ஜமாத் என்னும் இஸ்லாமிய அமைப்பு நடந்த மாநாட்டால்தான் கொரோனா பரவியதாக மாரிதாஸ் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை எதிர்த்து மேலப்பாளையத்தைச் சேர்ந்த தமுமுக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அப்போது மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிலும் மாரிதாஸ் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

தன் மீதான இந்த வழக்கையும் ரத்து செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மாரிதாஸ் டிசம்பர் 21 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையிலேயே விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக மாரிதாஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த மனு தொடர்பாக மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (டிசம்பர் 23) ஒத்தி வைத்தார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாரிதாஸ் மீதான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: