செவ்வாய், 21 டிசம்பர், 2021

வேலூர் ஜோய்ஆலுக்காஸ் கொள்ளை 15 கிலோ நகைகள் மீட்பு; மும்பையில் பயிற்சி எடுத்த திருடன் நடித்து காட்டினான்

தினமலர் : வேலுார்: விமானத்தில் மும்பைக்கு பறந்து சென்று 3 மாதம் பயிற்சி எடுத்த பின் வேலுார் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட சிங்க முகமூடி கொள்ளையனை கைது செய்த போலீசார் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர்.
வேலுார், தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த, டிச.,15ம் தேதி சுவற்றை துளை போட்டு 15 கிலோ நகை, 500 கிராம் வெள்ளி, பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், நகைக்கடைக்குள் புகுந்து சிங்க முகக் கொள்ளையன் கேமராவில் ஸ்பிரே அடித்து கொள்ளையடித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. 

இது தொடர்பாக எட்டு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அதில், சம்பவம் நடந்தபோது, அந்த பகுதியில் வந்த 234 மொபைல் போன் அழைப்புக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அணைக்கட்டு அருகே இருந்து 56 முறை 21 பேர் மொபைலுக்கு பேசியது தெரியவந்தது.

இதையடுத்து மொபைல் போன் ஆய்வு மூலம் அணைக்கட்டு அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்த டீக்காராமன், 27, என்பவரை நேற்று பிடித்து விசாரித்தனர். அதில் அவர் சிங்க முகமூடி அணிந்து கொள்ளையடித்ததும், இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வந்ததையும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மயானத்தில் புதைத்து வைத்துள்ளதும், கொள்ளையடிப்பதற்காக 3 மாதம் மும்பைக்கு சென்று சிறப்பு பயிற்சி எடுத்து வந்ததும், இதற்காக விமானம் மூலம் மும்பைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் டீக்காராமனை இன்று கைது செய்து, அணைக்கட்டு அருகே குச்சிப்பாளையம் ஏரிக்கரையோரம் உள்ள மயானத்தில் புதைத்து வைத்திருந்த 15 கிலோ தங்க நகைகள், 812 கிராம் வைர நகைகள், 100.5 கிராம் பிளாட்டின நகைகள் கைப்பற்றினர். அதேசமயம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்ததைவிட அதிக நகைகள் கைப்பற்றியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் கைதான டீக்காராமன் கொடுத்த தகவல்படி இதில் சம்பந்தப்பட்ட மற்ற கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: