புதன், 29 ஜூலை, 2020

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:

தினகரன் :  சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக வக்கீல் சுதாவை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்சி ராணி நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த இடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. அதற்கான நடைமுறைகளை தொடங்கியதால் மகிளா காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி எழுந்தது.
இந்த போட்டியில் ஜான்சி ராணி மீண்டும் வாய்ப்பு கேட்டு மேலிடத்தை அணுகினார். அதேபோன்று வக்கீல் சுதா, ஹசீனா சையத், சுமதி அன்பரசு, மானசா, கோவை கவிதா, மைதிலி தேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி மாற்றப்பட்டு, புதிய தலைவியாக வக்கீல் சுதா என்பவரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட வக்கீல் சுதா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணை தலைவியாகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது, தற்போது மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்ட அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தன

கருத்துகள் இல்லை: