செவ்வாய், 28 ஜூலை, 2020

சீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்

சிசிலியா பாரியா - பி பி சி :  ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் சீனா வழங்கும் கடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) அல்லது வேறு எந்த அரசாங்கம் வழங்கும் கடனையும் விட அதிகம். பொருளாதார உதவி, தொழில்வளர்ச்சிக்காக வழங்கப்படும் கடன் என்பவற்றை எப்போதுமே உலக நாடுகளனைத்தும் தமது வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளன.
ஆனால், சீனாவின் விஷயத்தில் 'கடன் ராஜீய உத்தி' என்ற சொல் நடைமுறையில் உள்ளது.
உலகப் பொருளாதாரம் குறித்த கல்வி நிறுவனமான, ஜெர்மனியின் கியெல் இன்ஸ்டிட்யூட்டின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோஃப் ட்ரெபேஷ் இந்த கடன் ராஜீய உத்தி அல்லது debt diplomacy பற்றிக் கூறுகையில், “வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் கடனில் பாதி மறைந்த கடனாகத் தான் உள்ளது.” என்று குறிப்பிடுகிறார். ட்ரெபேஷ், கார்மென் ரீன்ஹார்ட் மற்றும் செபாஸ்டியன் ஹார்ன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிவந்த முடிவுகளின் ஒரு பகுதி இது. இந்தக் குழு 1949 முதல் 2017 வரை சீனா வழங்கிய 5,000 கடன்களை ஆய்வு செய்துள்ளது.
பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், உலகின் நிதி அமைப்பில் சீனாவின் உண்மையான பங்களிப்பு குறித்துக் கண்டறிய
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளுடன் அதன் உறவு என்ன?

வளரும் நாடுகளில், சீனா அதன் வேர்களை வலுப்படுத்தியுள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கடன் வழங்குவதன் மூலம் இதைச் சாதித்துள்ளது சீனா.
இந்த மறைவான கடன்கள் (hidden credits) வெவ்வேறு சீன அமைப்புகளால் வழங்கப்பட்ட கடன்கள். இந்த அமைப்புகள் குறித்த தகவலைப் பெறுவது எளிதல்ல, காரணம், எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் பதிவு செய்யப்படாதவை இவை. அதனால் தான் இவை hidden credits என்று பெயரிடப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளுக்கு

இந்த ஒளிவு மறைவுக் கடன்களின் மொத்த அளவு கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ளது. இப்போது அது 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நிலுவையில் உள்ள கடனின் ஒருங்கிணைந்த மதிப்பையும் உள்ளடக்கியது.

சீனாவிடமிருந்து அதிக கடன் பெற்ற 50 நாடுகளைப் பற்றி ஆய்வு செய்தால், இந்த நாடுகளில் சராசரி கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. இது குறித்து, 2016 வரையிலான புள்ளிவிவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
'நேரடிக் கடன்களின்' பெரும்பகுதி சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் இரண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் - சீன வளர்ச்சி வங்கி மற்றும் சீன எக்சிம் வங்கி - அதாவது ஏற்றுமதி இறக்குமதி வங்கி. ஆனால், சீனா மற்ற நாடுகளுக்கு கடன் வழங்க, மறைமுக அமைப்புகளும் உள்ளன.
அத்தகைய கடன்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலான பணியாகும், ஏனென்றால், அரசுகளுக்கிடையிலான கடன்களாக வெளிப்படையாக வழங்கப்படுவது அரிதாகவே உள்ளது.
கடன்களில் பெரும்பாலானவை அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கானவையாகவும் அவற்றைப் பெறும் நிறுவனங்களும் அரசுக்குச் சொந்தமானவையாகவுமே உள்ளன. அவற்றைப் பெறும் நிறுவனங்களும் பொதுவாக அரசுத் துறை சார்ந்தவையாகவே உள்ளன.

"நாட்டின் கடன் நிலவரம் மற்றும் அது யாருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதை அறிவது அரசாங்கத்திற்கும், வரி செலுத்துவோருக்கும் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் பகுப்பாய்வுக்கும் அவசியம்" என்று ட்ரெபேஷ் விளக்குகிறார்.

உலகப் பொருளாதார அமைப்பில் சீனா

உலக நாடுகளுக்குக் கடன் வழங்கும் ஒரு சக்தியாக கடந்த 20 ஆண்டுகளில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது சீனா. உலக நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் என்ற தாராளமயமாக்கலை அப்போதே ஆதரிக்கத் தொடங்கியது.
அதனுடன், சீனாவின் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் சீனாவின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.
ட்ரெபேஷ் கூறுகிறார், "சீனா உலகின் மிகப்பெரிய அரசாங்கக் கடன் வழங்கும் நாடாக மாறியுள்ளது. சீனா அளவுக்கு உலகில் எந்த அரசாங்கமும் கடன் கொடுக்கவில்லை."
2018 ஆம் ஆண்டின் தரவின் படி, சீனா உலகின் பிற நாடுகளுக்கு (வளர்ந்த நாடுகள் உட்பட) 5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கடன் வழங்கியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% மட்டுமே இருந்தது.
சீனா தனது வங்கிகளின் மூலமாக அரசின் கருவூலப் பத்திரங்களைக் கூட வாங்கும் பெரிய பொருளாதாரமான அமெரிக்க நிறுவனங்களுக்கும் கூட கடன் வழங்குகிறது. என்றாலும் குறைந்த வருமானம் ஈட்டும் சிறிய பொருளாதார நாடுகளில் அதன் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
இப்படியாக, ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் சீனா வழங்கும் கடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) அல்லது வேறு எந்த அரசாங்கம் வழங்கும் கடனையும் விட அதிகம்.

சீனாவுக்கு அதிகம் கடன்பட்டுள்ள 50 நாடுகள்

ஜிபூட்டி, டோங்கா, மாலத்தீவு, காங்கோ ஜனநாயக குடியரசு, கிர்கிஸ்தான், கம்போடியா, நிஜேர், லாவோஸ், ஜாம்பியா மற்றும் சமோவா ஆகியவை சீனாவிடம் கடன் பெறும் முதல் 10 நாடுகள் ஆகும்.
சீனாவிடம் கடன் பெறும் 50 கடனாளி நாடுகளின் சராசரி கடன் 2005 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்து 2017 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
மற்றொரு கோணத்தில், இந்த நாடுகளின் வெளிநாட்டுக் கடன்களில் 40 சதவீதம் சீனாவிலிருந்து வந்தவை. இவற்றில், சீனாவின் மிகப்பெரிய கடனாளிகள், வெனிசுவேலா, ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகும்.
“சர்வதேச நிதி அமைப்பின் மீது அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை”, என்று கூறும் ட்ரெபேஷ், "உலகின் பெரும்பகுதிக்கு சீனா ஒரு முக்கிய நாடாக மாறிவிட்டது என்பதை நாம் இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.
"சீனா வழங்கும் கடன்கள் வளரும் நாடுகளில் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றின் தாக்கம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது, எனவே, இந்த திசையில் நாம் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்." என்றும் அவர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: