வியாழன், 30 ஜூலை, 2020

கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்

மின்னம்பலம் : இந்த ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் தமிழகத்தில் 89 ஆம் ஆண்டில் இருந்தே திமுக, அதிமுக என மாறி மாறிதான் மக்கள் ஆட்சிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
2016 இல் அது மிஸ் ஆகிவிட்டது. எனவே மீண்டும் எதிரக்கட்சியான திமுகவையே மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று கணக்கு போட்டு திமுக தலைவர் ஸ்டாலின் சுழன்றுகொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுக்கு உத்திவகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் விரிவான ஆழமான சர்வேக்களை தமிழகம் எங்கும் மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐபேக் டீமின் உறுப்பினர்கள் 2000 பேரை கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டாயிரம் பேரையும் இரண்டு முறை அவர்கள் சந்தித்துள்ளார்கள். அந்தந்த சமயத்து மக்கள் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் திமுக 180 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக ரிப்போர்ட் கொடுத்தது ஐபேக். அந்த சர்வே முடிவுகளைப் பார்த்து ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இதேநேரம் ஐபேக்கின் சர்வேக்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் திமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு சர்வே நடத்திய ஐபேக் அதன் முடிவை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அண்மையில் கொடுத்திருக்கிறது. ஜூலை 15 ஆம் தேதிவரையிலான அந்த சர்வேயில் முதலில் கொங்கு மண்டலத்தின் ரிசல்ட்டைதான் கொடுத்திருக்கிறது ஐபேக். கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 54 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதற்குக் காரணமே கொங்கு மண்டலத்தில் பெருவாரியாகக் கைப்பற்றிய தொகுதிகள்தான். மொத்தமுள்ள 54 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக பெற்றதால்தான் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் முன்னேறிய திமுகவை அதிமுக முந்தியது.

இந்நிலையில் கொங்குமண்டலத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திமுகவின் வாக்கு வங்கி 3% சரிவை சந்தித்திருக்கிறது என்பதுதான் ஸ்டாலினுக்கு ஐபேக் கொடுத்த ரிசல்ட். திமுக இழந்த 3% வாக்குகளை அதிமுக கூடுதலாகப் பெறுகிறது என்றும் அந்த ஆய்வு முடிவு சொல்கிறது. இந்த சர்வே முடிவுகள் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. கொங்கு மண்டலத்தில் பொதுவாக திமுக வீக் என்ற போதும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க திமுக கூட்டணிக்கே வாக்களித்தார்கள் கொங்கு மக்கள். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்டை, திமுக தலைமை தீவிரமாக ஆராயத் தொடங்கியிருக்கிறது.

-வேந்தன்



டிஜிட்டல் திண்ணை: ஐபேக் சர்வே முடிவுகள்... ஸ்டாலின் ஷாக்!

டிஜிட்டல் திண்ணை: ஐபேக் சர்வே முடிவுகள்... ஸ்டாலின் ஷாக்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது

"தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக திமுக தலைமைக்கு கொடுத்திருக்கிறது ஐபேக் என்று டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த பட்டியல் ஒரு பக்கமிருக்க தமிழகம் முழுவதும் ஐபேக் டீம் நடத்திய இன்னொரு வித்தியாசமான சர்வே முடிவுகள் திமுக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாகவே அரசியல் வட்டாரத்திலும் ஊடக வட்டாரத்திலும் சாம்பிள் சர்வே எனப்படும் முறையே அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது 7 கோடி பேர் கொண்ட தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை சந்தித்து கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த மக்கள் தொகைக்குமான சதவிகிதமாக மாற்றும் முறை தான் சாம்பிள் சர்வே.

ஆனால் ஐபேக் டீம் இம்முறை தமிழகத்தில் திமுகவுக்காக தனது பிரத்தியேகமான சர்வே எடுத்து கொண்டிருக்கிறது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரே மூச்சில் சென்று சாம்பிள்களை சேகரித்து அதன்படி கணக்கு எடுக்கப்படுவதில்லை. ஐபேக் டீமின் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2000 பேரை கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டு ஆயிரம் பேரையும் இரண்டு முறை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.

ஒவ்வொருமுறை சந்திப்பின் போதும் அந்த ஒவ்வொருவருக்காகவும் சுமார் நான்கு மணி நேரம் அவர்கள் செலவிடுகிறார்கள்.

இதன்படி கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஐபேக் டீம் இந்த சர்வேயில் ஈடுபட்டு வருகிறது. சர்வே என்றால் அடுத்த முதல்வர் ஸ்டாலினா, எடப்பாடியா, ரஜினியா? மதுவிலக்கை ஆதரிக்கிறீர்களா இல்லையா....? எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள்...? இப்படிப்பட்ட கேள்விகள் அல்ல.

அந்தந்த 15 நாட்களில் தமிழகத்தை உலுக்கும் குறிப்பாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களை உலுக்கும் சம்பவங்கள், பிரச்சனைகள் பற்றி மக்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். இதேபோல் ஒரு மாதத்திற்கு இரு முறை அதே நபரை தொடர்ந்து சென்று சந்தித்து அந்தந்த நேரத்து பிரச்சனைகள் அதன் ரீதியாக அவர்களின் மன ஓட்டம் என்ன என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

இதன்படி மார்ச் மாதம் அரசை எதிர்த்து கருத்துச் சொன்ன ஒருவர், ஏப்ரல் மாதம் ஆதரித்து சொல்லியிருக்கலாம். மே மாதம் மீண்டும் ஆதரிக்கலாம் அல்லது மிகக் கடுமையாக எதிர்த்து இருக்கலாம். இப்படி மக்களின் எண்ண ஓட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஐந்து மாதங்களில் எந்த போக்கில் சென்று கொண்டிருக்கிறது.‌‌.. அவர்களின் அடி மனது செல்லும் திசை என்ன என்பதை கணக்கெடுக்கும் சர்வே தான் இது.

அதாவது புள்ளி விபரங்களோடு மக்களின் மனதில் உள்ள விவரங்களையும் கணக்கெடுக்கும் இந்த சர்வே மிகுந்த பொருட் செலவு மிக்கது. ஒவ்வொரு மாதமும் 2000 பேரை இரு முறை சென்று சந்திக்க வேண்டும். அவர்களிடம் சுமார் நான்கு மணி நேரங்கள் செலவிட வேண்டும். அப்படிப் பார்த்தால் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாயிரம் பேரை 10 முறை சென்று சந்தித்து அவர்களோடு 40 மணிநேரம் ஐபேக் உரையாடி உள்ளது. இதனால் தான் இந்த சர்வே பொறிமுறைக்கு அதிக செலவு பிடிக்கும். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே பிரதமர் மோடிக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட மாநில கட்சிப் பிரமுகர்களுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக இருந்தபோது இந்த முறையை பயன்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம் தேர்தலுக்கு முன்னதாக மக்களின் மனப்போக்கு எந்த வகையில் இருக்கிறது... அவர்களை எந்தெந்த பிரச்சனைகள் பாதிக்கிறது... எந்தெந்த பிரச்சினைகளின் பாதிப்பால் அவர்கள் ஒரு முடிவெடுக்க தூண்டப்படுகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக தெரிந்துவிடும். வழக்கமான சாம்பிள் சர்வே முறையில் சர்வே எடுத்த, அடுத்த ஒரு மாதத்தில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடந்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நீடித்த மனப்போக்கு கண்டறியும் சர்வேயில் மக்களின் மனம் துல்லியமாக பதிவு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த காரணத்தால் தான் அதிகப் பொருட் செலவையும் தாண்டி இந்த சர்வேயை எடுத்திருக்கிறது ஐபேக் டீம்.

மார்ச் ஏப்ரல் மாதங்களில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சர்வே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் ஜூன் வரையிலான மக்களின் மனப்போக்கு குறித்த முடிவுகளை திமுக தலைமையிடம் அளித்திருக்கிறது ஐபேக். அதன்படி கடந்த நான்கைந்து மாத மக்களின் மன ஓட்டத்தின் அடிப்படையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 180 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக ஆழமான முறையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவு என்பதால் இந்த ரிசல்ட்டை அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்கிறார்கள்.

மேலும் ஐ பேக் தலைமை திமுகவிடம், "இந்த நீடித்த சர்வே அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு தொடரும். அப்போது திமுகவுக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என முடிவுகள் வந்தால் கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் திமுக தனித்து கூட களம் இறங்கலாம். திமுகவின் வரலாற்றில் 1971 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஒட்டி 2021 தேர்தல் முடிவுகளும் வரலாற்று வெற்றியாக அமையக்கூடும்' என்றும் குறிப்பு கொடுத்திருக்கிறார்கள்" என்ற மெசேஜை செண்ட் செய்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: