செவ்வாய், 4 ஜூன், 2019

தமிழ்வழிக்கல்வி தேனி மாணவி உதயகீர்த்திகா, விண்வெளி பயிற்சிக்காக போலந்து ....

பாண்டியன் சுந்தரம் : 'இஸ்ரோ' விஞ்ஞானியாக விண்வெளி செல்ல
விரும்பும் தமிழ்வழிக்கல்வி தேனி மாணவி உதயகீர்த்திகா,போலந்து செல்கிறார், விண்வெளி பயிற்சிக்காக!
தேனியைச் சேர்ந்த தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவி உதயகீர்த்திகா தனித்து விளங்கி, பெரும் சாதனை படைத்துள்ளார்.இவர் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து ஆகிய
நாடுகளில் நடைபெறவுள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்குத் தேர்வாகி உள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து இவர் ஒருவர் மட்டுமே இந்தப்பயிற்சிக்கு
தேர்வாகி உள்ளார்!

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர், உதயகீர்த்திகா. இவரின் தந்தை தாமோதரன் ஓவியர் மற்றும் எழுத்தாளராக உள்ளார். அல்லிநகரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் ஈர்க்கப்பட்டு, விஞ்ஞானியாக ஆசைப் பட்டிருக்கிறார்.
ஏழ்மைநிலையில் மிகவும் சிரமப்பட்டே தன் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

2012-ஆம் ஆண்டு, மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். பிளஸ் 2 படிக்கும் போது 2014-ஆம் ஆண்டு, அதே போன்ற மற்றொரு போட்டியிலும் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார். இவரின் கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள், கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சிக்குப் படிக்கும்படி ஊக்கப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் கீர்த்திகாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியின் மீதான ஆசையை மேலும் தூண்டியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான மேல் படிப்பைத் தொடர்வதற்காகப் பணம் இல்லாமல் தவித்துள்ளார். பின்னர், தன் தந்தையுடன் சேர்ந்து அல்லிநகரம் முழுவதும் தெரிந்தவர்களின் உதவியைப் பெற்று, உக்ரைனில் உள்ள 'கார்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டி' யில் சேர்ந்து அங்கு சிறப்பாக நான்கு ஆண்டுகள் படித்து 92.5 சதவிகிதம் மதிப்பெண் எடுத்துள்ளார்.
இதையடுத்து, கீர்த்திகாவுக்கு போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில், ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டு விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சிபெறவும், விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் 20 மாணவர்கள் இப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், இந்தியாவிலிருந்து கீர்த்திகா மட்டும் செல்கிறார்.
இதுபற்றி பேசிய கீர்த்திகா, "இதுவரை இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரண்டு பெண்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அமெரிக்காவின் நாசாவில் இருந்துதான் சென்றனர். நானும் அவர்களைப் போல் விண்வெளிக்குச் செல்ல வேண்டும். ஆனால், எனக்கு இந்தியாவின் இஸ்ரோ தளத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. அதுவே என் லட்சியம்" என்று கூறியுள்ளார்."2021-இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்
டுள்ளது. அதில் நானும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறேன்"
அல்லிநகரம் தாமோதரன், இவரது தந்தை, எண்: 9626850509

கருத்துகள் இல்லை: