திங்கள், 3 ஜூன், 2019

ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!

மின்னம்பலம் : தமிழகச் சட்டமன்றம் விரைவில் கூட இருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் அதிமுக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில் திமுக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் 22 தொகுதிகளில் திமுக 13, அதிமுக 9 என்ற அளவில் பங்கிட்டுக்கொண்டனர்.
ஓரிரு எண்ணிக்கையில் அதிமுக மெஜாரிட்டி கோட்டினைத் தொட்டுக் கடந்துவிட்ட நிலையிலும், தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரைக் கொத்தாக திமுக பக்கம் கொண்டு செல்லும் முயற்சிகளும் திரை மறைவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
இதற்காக நடந்துவரும் முயற்சிகளை ஆட்சிக்கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக என்ற தலைப்பில் நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்டிருந்தோம்.
அந்தக் குதிரை பேரப் பேச்சுவார்த்தை இடையே அதிமுக தரப்பில் சில நிபந்தனைகளும் வைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன. என்ன நிபந்தனை அது என அதிமுக வட்டாரத்திலேயே விசாரித்தோம்.
“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏதோ பணக்கட்டுகளில் ‘மஞ்சக் குளித்துக்கொண்டிருப்பது’ போல ஒரு தோற்றம் மற்ற கட்சிகளிடையேயும் மக்களிடையேயும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. ஒரு சில அமைச்சர்கள் மட்டும்தான் முற்று முழுதாக அதிகாரத்தின் பலனை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் ஏதோ ரேஷன் பெறுவதைப் போலச் சில பணப் பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்த நேரத்தில் திமுக தரப்பிலிருந்து சிலர் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
அவர்களுக்கு இந்த ‘ரேஷன்’ எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய நிபந்தனை எம்ஜிஆர் காலத்து மாடல் ஒன்றை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
கட்சி நிர்வாகிகளிடத்தில் பணம் தங்கு தடையின்றிப் புழங்க வேண்டும், அதன் மூலம் கட்சி செயல்பாடுகளுக்கும் பிரச்சினை இருக்காது, தொண்டர்களுக்கும் பல விஷயங்களைச் செய்துதர முடியும் என்பதை உணர்ந்த எம்ஜிஆர், தனது ஆட்சிக் காலத்தில் மதுபானக் கடை உரிமைகளைத் தனது கட்சி நிர்வாகிகளுக்குக் கொடுத்தார்.
அதாவது ஒரு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ என்றால் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும், பார்களையும் நடத்தும் உரிமையை அந்த எம்.எல்.ஏ பெறுவார். இதன் மூலம் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எந்த அமைச்சரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலை இருந்தது.
மதுபானத்தை அரசிடமிருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும். அதேநேரம் விற்பனை உரிமையை, பார் உரிமையைத் தனியாருக்கு அளிப்பது, அதைக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கே கொடுப்பது என்ற எம்ஜிஆரின் பாலிசி இப்போது மீண்டும் தேவைப்படுகிறது.
திமுக மீண்டும் எங்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு கொடுத்தால் மட்டும் போதாது. இப்போதைய டாஸ்மாக் சிஸ்டத்தையும் மாற்றி அமைத்திட வேண்டும்.
ஏனெனில், இப்போதைய டாஸ்மாக் கடை முறை மூலம் குறிப்பிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டுமே அள்ளிக்கொண்டு போகிறார்கள்.
திமுக மீண்டும் எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து ஜெயித்தால், அப்போதும் இதேபோன்ற ரேஷன் எம்.எல்.ஏ.க்கள் ஆக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் மதுபானக் கடை நடத்தும் உரிமையை அந்தந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்க வேண்டும். அந்த உறுதியை அளிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிபந்தனையைக் கேட்டவுடன் திமுக தரப்பிலேயே ஒரு சிலர் திடீர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். ‘இது உங்களுக்கு மட்டும் இல்லை; எங்களுக்கும் நல்ல விஷயம்தானே’ என்று உற்சாகம் அடைகின்றனர்” என்று கூறினார்கள் அதிமுக வட்டாரத்தில்.
ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் தமிழகத்தின் டாஸ்மாக் சிஸ்டமே மாற்றி அமைக்கப்படுவதற்கான அச்சாரம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை: