சனி, 8 ஜூன், 2019

திமுகவின் 23 எம்பிக்களை குறிவைக்கும் அமித் ஷா ..

திமுக எம்பிக்கள்  ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.
37 திமுக கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் சிங்கம் போல செயல் படுவார்கள் என்றும் தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக தீவிரமாக குரல் கொடுப்பார்கள் என்றும் ஸ்டாலின் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமித்ஷா தமிழ்நாட்டை நோக்கி சிறப்பு கவனம் பதித்திருக்கிறார்.
பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ப்பது ஒரு புறம் என்றால் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதும் அமித் ஷாவின் திட்டம்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் திமுக சார்பில் நின்று வென்ற 23 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி சார்பில் வென்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அரசியல் ஜாதகத்தை விசாரித்து தனக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென மத்திய உளவுத்துறைக்கு மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார் அமித்ஷா.

அரசியல் ஜாதகம் என்றால்... அவர்கள் ஒவ்வொருவரும் எந்தக் கட்சியில் இருந்து அரசியல் வாழ்வை தொடங்கினார்கள், கட்சி மாறுவதில் அவர்களின் வரலாறு என்ன, அவர்களின் ஆரம்பகால தொழில் என்ன, இப்போதைய தொழில் என்ன, இதன் மூலம் எகிறிய சொத்து மதிப்பு என்ன, இன்னும் குறிப்பாக இந்த 37 எம்பிக்களில் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்கள் யார், வலை விரித்தால் விழக் கூடியவர்கள் யார் என்பன போன்ற விவரங்களை தான் அமித்ஷா அறிக்கையாக கேட்டிருக்கிறார்.
இதற்காக முழு மூச்சில் தகவல் திரட்டும் பணி நடந்துவருகின்றது. இந்த தகவல் திரட்டும் பணி முடிந்த பிறகு சில அதிரடி வியூகங்களை தமிழ்நாட்டில் அரங்கேற்ற இருக்கிறார் அமித்ஷா என்கின்றனர் ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: