சனி, 8 ஜூன், 2019

ஸ்டாலின் ; கூடங்குளம் அணுக்கழிவு மையம் தொடங்கும் முடிவை கைவிடுக!

கூடங்குளம் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடுக -ஸ்டாலின்zeenews.india.com:  கூடங்குளம் அணுக்கழிவுகளை அணு உலை வளாகத்துக்குள் சேமித்து வைக்க ’AFR’ கட்டும் முடிவினை மத்திய – மாநில அரசுகள் உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்! கூடங்குளம் அணுக்கழிவுகளை அணு உலை வளாகத்துக்குள் சேமித்து வைக்க ’AFR’ கட்டும் முடிவினை மத்திய – மாநில அரசுகள் உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,
"கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாக, கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் 6.5.2013 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 15 கட்டளைகளைப் பிறப்பித்து,

அவற்றை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அணு உலையை செயல்படுவதற்கு அனுமதித்தது. “அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான (Away From Reactor- AFR) வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்திட வேண்டும்” என்பது அவற்றுள் மிக முக்கியமான நிபந்தனை. இந்த நிபந்தனை நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு முழுமையாக இருக்கிறது என்பதை அந்த கட்டளைகளிலேயே உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
முக்கியமான அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்கான ஐந்து ஆண்டு காலக்கெடு 2018 மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், தேசிய அணுமின் கழகம் மீண்டும் மீண்டும் “கால அவகாசம்” கேட்டு தள்ளிக்கொண்டே போவதில்தான் ஆர்வமாக இருக்கிறதே தவிர- உச்சநீதிமன்றத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. “2022 ஆம் வருடத்திற்குள் AFR கட்டி முடித்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ள நிலையில், கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே AFR கட்டுவதற்கு - வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரத்தில் பொதுமக்கள் “கருத்துக் கேட்புக் கூட்டம்” நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை,அதிமுக அரசின் கீழ் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே அறிவித்திருப்பதிலிருந்து- உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து அணுக் கழிவுகளினால் விளையும் ஆபத்தை உரிய காலத்தில் தடுத்திட மத்திய பா.ஜ.க. அரசு தவறியதோடு மட்டுமில்லாமல்- மாநில அதிமுக அரசும் இதில் அலட்சியத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது. தமிழக மக்களின் உயிரைப் பணயமாக வைத்து- சுற்றுப்புறச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை “சோதனைக்கூடப் பொருட்களாக” ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுகிறது. ஆகவே “கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும்” என்றும், “புதிதாக நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும்” என்றும் பொதுமக்களும், இந்த அணு உலைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வரும் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பும் கோருவதில் முழுமையான நியாயம் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராதாபுரம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் அச்சத்தையும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் உரிய வகையில் வாய்மொழியாகவும் எழுத்துப் பூர்வமாகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் பணிகளுக்கு கடும் எதிர்ப்புகளை அழுத்தமாகப் பதிவு செய்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
பதினைந்து கட்டளைகளைப் பிறப்பித்து கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு அனுமதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஷ்ரா அவர்கள் தலைமையிலான அமர்வு, இது போன்ற பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த வழக்கு நீதிமன்றத்தின் முன்பு வரும் போது “எங்களின் கடமை” என்று சுட்டிக்காட்டி சில முக்கிய அறிவுரைகளை மத்திய- மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது. “எச்சரிக்கையாக இருங்கள். எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். தொடர்ந்து விழிப்புடன் இருப்பது உங்களது கடமை. எவ்வித மெத்தனத்திற்கும், துளி தூக்கத்திற்குக்கூட இடம் கொடுத்து விடாதீர்கள் என்று நாடு உங்களை எச்சரிக்கிறது” என்று பொன் வரிகளால் மத்திய- மாநில அரசுகளுக்கு அந்த எச்சரிக்கையை தங்கள் தீர்ப்பில் விடுத்திருக்கிறார்கள்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மேற்கண்ட எச்சரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் நன்கு நினைவில் கொண்டு மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: