சனி, 8 ஜூன், 2019

இந்தி மொழி - உருவான வரலாறு....

நக்கீரன் : இந்தியைக் கற்பதில் தவறேயில்லை. ஆனால் இந்தியைப் பேசாத
மக்களின் மேல் அதைத் திணிப்பதன் அரசியலே நம் கவனத்துக்குரியது. ஒருகாலத்தில் இந்தி எதிர்ப்பை முன்னெடுத்த திமுக முன்னணிக் குடும்பம் தம் குடும்ப உறுப்பினர்கள் இந்திக் கற்க அனுமதித்த அரசியலை வைத்து மட்டும் இதை மலிவாக எடைபோட்டிடக் கூடாது. இந்தித் திணிப்பு என்பது அந்தளவுக்கு அபாயகரமானது.
ஆயிரம் ஆண்டுக்காலமாக இருந்துவந்த உருது மொழியை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே இந்தி. உருது பிரிட்டிசார் காலத்திலும் அலுவல் மொழியாக இருந்தது. இந்து தேசிய கருத்தியலை உருவாக்கியவர்களால் உருதுமொழி ஒரு கட்டத்தில் இஸ்லாமிய மொழியாக அடையாளம் காணப்பட்டது. இதற்கு மாற்றாகப் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை இவர்களால் முன்னிறுத்த முடியவில்லை. எனவே சமஸ்கிருதத்தின் குழந்தையாக இந்தி பெற்றெடுக்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் மத அடிப்படையில் ஒரு மொழிப் போர் தொடங்கியது. இதற்கு வித்திட்டவர் ஒரு கவிஞரும் எழுத்தாளருமான பரத்தேந்து ஹரிஷ் சந்திரா என்பவர் ஆவார். மார்வாடி அகர்வால் இனத்தைச் சேர்ந்த இவரது தாய்மொழி உருதுதான். எனினும் ‘ஆஜ் சல் ரஹா ஹை ஹிந்தி பர் ஹிந்துஸ்தானி ஃபஸ்ஸா!’ (இந்தி இன்று இந்துஸ்தானின் வலையில் அகப்பட்டுள்ளது) என்ற அன்றைய இந்து எழுச்சிக் கருத்தியலுக்கு ஏற்ப இவர் மாறுகிறார். உருது என்பது இஸ்லாமியரின் மொழி, இந்திதான் இந்துக்களின் மொழி என்கிற இந்து அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப இவர் உருது மொழியை இழிவாகப் பேசி எழுதும் இந்திமொழி வெறியராக மாறிவிடுகிறார். தொடர்ந்து நவீன இந்தி மொழியின் தந்தையாக உருவெடுக்கிறார்.

இவரது மரணத்துக்குப் பிறகு 1893ல் பனாரஸ் நகரில் தோன்றிய நாகரி பிரச்சாரிணி சபா என்கிற அமைப்பும், 1910ல் அலகாபாத் நகரில் தோன்றிய இந்தி சாகித்ய சம்மேளனம் அமைப்பும், இந்தி மொழியும் தேவநாகரி வரிவடிவமும் அனைத்து வகையிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற பரப்புரையில் ஈடுப்பட்டன. நாகரி பிரச்சாரினி சபா சார்பில் மதன் மோகன் மாளவியா வடமேற்கு மாநிலங்களின் துணைநிலை ஆளுநர் சர் ஆண்டனி மெக்டொனால் என்பவரிடம் தேவநாகரி எழுத்து வடிவத்தை நீதிமன்றங்களிலும் தொடக்கக் கல்வியிலும் பயன்படுத்த வேண்டும் என 1897ல் கோரிக்கை மனுவை அளிக்கிறார். இது 1900 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு நீதிமன்றங்களில் முதலில் நடைமுறைக்கு வருகிறது. அன்று வீழ்த்தப்பட்ட உருதுமொழிப் பின்னர் என்றுமே எழுந்து நிற்க முடியாமல் போயிற்று. இந்த வெற்றி தந்திரத்தைதான் பாசிச சக்திகள் பிறமொழிகளின் மீதும் குறிப்பாக இந்தியின் தாயான சமஸ்கிருதத்தோடு ஈராயிரம் ஆண்டுக்காலப் போரில் ஈடுப்பட்டிருக்கும் தமிழ்மொழியின் மீதும் நிலைநாட்டிடத் துடிக்கின்றது.
நீண்ட வரலாறு கொண்டதாகத் தமக்குத் தாமே கூறிக்கொள்ளும் இந்தி மொழியை ஒரு செறிவுடைய மொழியாக மாற்றுவதற்கு 1870 முதல் 1920 வரை பெரும் போராட்டமே நடந்தது. எண்ணற்ற வட்டார வழக்குகளைக் கொண்டுள்ள அந்தப் பேச்சுமொழிக்கு மொழி இலக்கணம், இலக்கிய வழக்கு மொழி அமைக்க அதன் அறிஞர்கள் திணறினார்கள். பின்பு கவிஞர்கள் பயன்படுத்திய ‘கடி போலி’ என்கிற வட்டார மொழியே தேர்வானது என்று விவரிக்கிறார் இதழியலாளர் அக்சய முகுல். பாரசீகச் சொற்களைக் களைந்து எவ்வளவுக்கு முடியுமோ அந்தளவுக்குச் சமஸ்கிருதச் சொற்களால் புதிதாகப் புனையப்பட்ட ஒரு மொழியே நவீன இந்தி மொழி.
இவ்விடத்தில் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே இலக்கணம் கண்ட தமிழ் மொழியை நினத்துப் பாருங்கள்! இந்தியைப் போல் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு அல்லது மொழிக்கு எதிராகத் தோன்றியதல்ல தமிழ்மொழி. இந்தி மொழியைப் பற்றி அவர்கள் பெருமிதமாகக் கூறும் ஒரு கவிதை வரி உண்டு. ‘ஹிந்தி – ஹிந்து தர்மா ஹிந்த் கா, பியாரி ஹிந்து பாஷா!’. இதன் பொருள், ‘இந்தி – இந்து, ஹிந்துவின் மதம்; இந்தி மொழி அழகியது’ என்பதாகும். இதிலிருந்தே இந்தி என்பது இந்துத்துவாவின் மொழி எனும் அவர்களது செயல் திட்டம் தெளிவாக விளங்கும். இதனால்தான் இந்திக் கற்றால் துளசி இராமாயணம் கற்கலாம் என்றார் ராஜாஜி. இந்தப் புராணக் குப்பைகளைத் தவிர்த்து இந்தி மொழியில் அறிவுத்துறைச் சார்ந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை என்று எதிர்த்தார் பெரியார். இந்தி மொழியை எதிர்ப்பவர்களை மூன்று ஆண்டுகள் வரை தண்டிக்க வேண்டும் என்றார் ராஜாஜி. சத்தியமூர்த்தி ஒருபடி மேலே சென்று அதுபோதாது ஆயுள்தண்டனை அல்லது தூக்குத் தண்டனை அளிக்கவேண்டும் என முழங்கினார். இந்திமொழி யாருக்கானது என்பதைப் புரிந்துக்கொள்ள இதுபோதும்! தமிழ் என்பது நிலத்தின் மொழி. இந்தி என்பது மதத்தின் மொழி!
நவீன இந்தி மொழியின் தந்தையான பரதேந்துவின் கவிதை வரி இது: “அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் அவரவர் சொந்த மொழியே ஆதாரம்”. இதையேதான் நாங்களும் சொல்கிறோம். “எங்கள் முன்னேற்றத்துக்கும் தமிழ்தான் ஆதாரம். – போய்வா இந்தியே!”
(ஐயா நக்கீரன் நக்கீரன் அவர்களின் பதிவு..

கருத்துகள் இல்லை: