சனி, 27 அக்டோபர், 2018

கட்சியை ஆரம்பிக்க குருமூர்த்தி தொடர்ந்து ரஜினிக்கு அழுத்தம்

டிஜிட்டல்  திண்ணை:  கூட்டணி... ரஜினி சொல்லும் நிபந்தனை!
மின்ன்னம்பலம்: ”ரஜினிக்கும் திமுகவுக்கும் இடையே நடக்கும் யுத்தம் முரசொலி விமர்சனம் மூலம் வெளிப்படையானதாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவும், ரஜினியும் உடன் இருந்தால் தேர்தலை எதிர்கொள்ள சரியாக இருக்கும் என கணக்குப் போடுகிறது பிஜேபி. அதற்கான அழுத்தம் ரஜினிக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக தொடர்ந்து ரஜினியோடு பேச பல முயற்சிகளை செய்து வருகிறது பிஜேபி. ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசும் குருமூர்த்தி அவரை சந்திக்க பத்து முறை அப்பாயின்மெண்ட் கேட்டால், ஒருமுறைதான் ரஜினி வரச் சொல்கிறாராம். பல நேரங்களில், தவிர்த்தே வருகிறாராம். ‘அதனால என்ன போன்லயே சொல்லுங்களேன்...’ என்றும் கேட்கிறாராம் ரஜினி.
தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இதை சொல்லியிருக்கிறார் ரஜினி. ‘எப்படியாவது என்னை அவங்க பக்கம் இழுத்துப் போடணும்னு கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. கூட்டணியெல்லாம் நான் யோசிக்க கூட இல்லை. தனிக்கட்சி அவ்வளவுதான். ஏ.சி.சண்முகம் கூட என்கிட்ட சொன்னாரு. ஆனால், கூட்டணி என பேசினால் கட்சியே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

 இன்னொரு நண்பர் வந்து, ‘திருமாவளவன் கூட்டணிக்காக கேட்கிறாரு பேசலாமா?’ன்னு கேட்டாரு. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். வாசனும் கூட என்கிட்ட கேட்டாரு. நான் சிரிச்சுட்டே அவரையும் தவிர்த்துட்டேன். வேணும்னா அவங்க கட்சியை நம்ம கட்சியில மெர்ஜ் பண்ணிடட்டும். தனித்துதான் போட்டி என்பதில் நான் உறுதியாக இருக்கேன். எப்படியும் நாடாளுமன்ற தேர்தலில் நாம போட்டியிடப் போறது இல்லை. சட்டமன்றம்தான் நம்ம டார்கெட். 2021க்குள்ள அடிமட்டத்தை நாம ஸ்ட்ராங் பண்ணணும். அதுவரைக்கும் யாரு வந்து கூட்டணி பற்றி பேசினாலுமே முடியாதுன்னுதான் சொல்லிட்டே இருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். கட்டுப்பாட்டை மீறி யாரு நடந்தாலும் அவர்களை ரஜினி நீக்கிவிடுவார் என்ற பயத்தைக் காட்ட வேண்டும் என்றுதான் ரசிகர்கள் சிலர் மீது தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார்.
இதற்கிடையில், அமைச்சர் செங்கோட்டையனும் ஒருமுறை ரஜினியை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் மூலமாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அரசியல் நிலவரங்களைப் பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள். செங்கோட்டையன் செயல்பாடுகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி அவரைப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. ‘நீங்களும் எங்களோடு இருந்தால் நாங்களும் சந்தோஷப்படுவோம்’ என செங்கோட்டையன் கேட்டாராம். அதற்கு ரஜினி சிரித்தே மழுப்பி அனுப்பிவிட்டார். இந்த சந்திப்பு பற்றி செங்கோட்டையனே முதல்வர் எடப்பாடியிடம் சொல்லியும் விட்டாராம். என்ன சொன்னாரு ரஜினி என எடப்பாடியும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டாராம்.
அதுமட்டுமல்ல, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவும் ரஜினியை சந்தித்து சில ஐடியாக்களை சொல்லியிருக்கிறார். ‘நாம சேர்ந்து பண்ணுவோம்’ என ராம்மோகன் சொன்னாராம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டாலும் பதில் எதுவும் சொல்லாமல் அவரையும் அனுப்பியிருக்கிறார் ரஜினி.
திமுக என்ன நினைக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். கலைஞர் உயிரோடு இருந்த சமயத்தில், ரஜினி கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். அப்போதே, ரஜினி வருவதை முரசொலி செல்வம் விரும்பவில்லை. ‘அவருதான் கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டாரு. அப்படி இருக்கும் போது எதுக்கு அவருக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்குறீங்க? அவரு தலைவரோட உட்கார்ந்து பேசிட்டு போய், அவர் செல்வாக்கை வளர்த்துக்கப் பார்க்கிறாரு.’ என்று சொன்னாராம். அதற்கு ஸ்டாலினோ, ‘கேட்டாரு... வரச் சொல்லிட்டேன். இப்போ வர வேண்டாம்னு சொன்னால் நல்லா இருக்காது’ என சொல்லிவிட்டாராம். ஆனால், ரஜினி வந்த போது கூட, ஸ்டாலின் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் அப்போது இல்லை. கலைஞர் மறைந்த சமயத்திலும் கோபாலபுரத்துக்கு சிரமப்பட்டுதான் வந்து போனார் ரஜினி.
இனி ரஜினி தனிக்கட்சியாக இருந்தாலும் சரி... அல்லது யாரோடு கூட்டணி வைத்தாலும் சரி... அது திமுகவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என ஸ்டாலினும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். அதனால்தான் ரஜினிக்கு திமுகவில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கிவிட்டது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: