வெள்ளி, 26 அக்டோபர், 2018

சோபியா விவகாரம் ..தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!
மின்னம்பலம் : மாணவி சோபியா விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியாவும் பயணம் செய்தார். அப்போது, தமிழிசை முன்பு “பாசிச பாஜக ஒழிக” என்று சோபியா முழக்கமிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை, சோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், அவர்மீது தூத்துக்குடி புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, புதுக்கோட்டைக் காவல்துறையினர் சோபியாவை கைது செய்தனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்திய நிலையில், தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து அக்டோபர் 3ஆம் தேதி சோபியா தனது படிப்பைத் தொடர மீண்டும் கனடா புறப்பட்டுச் சென்றார். சோபியா கனடாவுக்குப் புறப்பட்ட இரண்டாவது நாளே அதாவது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அவரது தந்தை சாமி தூத்துக்குடி ஜே.எம். 2 நீதிமன்றத்தில், பாஜக தலைவர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் தமிழிசை மற்றும் பாஜகவினர் 10 பேர் மீது தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (அக்டோபர் 25) விசாரித்த, தூத்துக்குடி நீதிமன்றம், தமிழிசை சவுந்தரராஜன் மீதும் பாஜகவினர் மீதும் வழக்கு பதிய உத்தரவிட்டது. மேலும் நவம்பர் 20ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை: