செவ்வாய், 23 அக்டோபர், 2018

வடசென்னை: புகாரும் விளக்கமும்!

வடசென்னை: புகாரும் விளக்கமும்!மின்னம்பலம்:  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள வடசென்னை படம் கடந்த ஆயுதபூஜை (செப்டம்பர் 17) அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், வடசென்னை படத்தில் உள்ள ஆபாச வசனங்களை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 22) அளித்துள்ளார். அந்த மனுவில், “நடிகர் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை திரைப்படம் வன்முறையை களமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வடசென்னை மக்கள் பேசும் தமிழை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் படத்தில் காட்டுகின்றனர். பெண்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் தகாத வார்த்தைகள் புகுத்தப்பட்டுள்ளன.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் இந்தச் செயல், சென்னை நகர மக்களையும், பெண்களையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எனவே வடசென்னை படத்தில் வரும் ஆபாச வசனங்களை நீக்குவதற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வடசென்னை திரைப்படம் மீது ஒருபக்கம் நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் வடசென்னை மக்களை தவறாகச் சித்திரித்துள்ளதாக எதிர்ப்பும், எதிர்மறையான விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுப்படுத்துவதாகவும், அவர்கள் மனம் புண்படும்படி இருப்பதாகவும் சில மீனவ அமைப்புகள் பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் நோக்கம் எப்போதுமே எந்த ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக அரசியலோ, சினிமாவோ செய்வதில்லை. இந்தப் படத்தில் சில காட்சிகள் குறிப்பாகக் கப்பலில் நடக்கும் முதல் இரவு காட்சி மீனவ சமுதாயத்தை மிகவும் இழிவாகச் சித்திரிப்பதாகச் சொல்லி அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்குவதற்குத் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை இன்று தொடங்கி இருக்கிறோம். தணிக்கை குழுவை அணுகி இருக்கிறோம். அவர்கள் அதையெல்லாம் பார்த்து, படத்தில் இருந்து நீக்குவதற்கு ஏழு அல்லது பத்து வேலை நாட்கள் ஆகும். கண்டிப்பாக அதை நீக்கி விடுகிறோம்.

மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் யாரையும் இழிவுப்படுத்துவதோ அல்லது குறைத்துக்காட்டி அதன் மூலம் சினிமாவில் லாபம், பேர் புகழ் சம்பாதிப்பதாக இல்லை.
வடசென்னை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் பிரச்சினைகளையும் அவர்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடிகளை விவாதிப்பதும், அந்த இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும், இந்த நெருக்கடிகளிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதைப் பதிவிடுவதும்தான் எங்கள் நோக்கம்.
இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள், யாராவது தனி நபரையோ, ஒரு சமூகத்தையோ புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: