புதன், 24 அக்டோபர், 2018

மைத்ரி - கோட்டா படுகொலைக்கான கதை திசை மாறிய விதம்!

Ajeevan Veer : இலங்கை ஜனாதிபதியை படுகொலை செய்ய றோ முயல்கிறது
எனும் செய்தி வந்ததும் இலங்கை மக்கள் சற்று அதிரவே செய்தார்கள். இது குறித்து அதிகமாக ஊடகவியளாளர் சந்திப்புகளை நடத்தியவர் கம்மன்பிலதான். கம்மன்பிலவின் வாயிலிருந்து இந்த கொலை முயற்சிக்கு பின்னால் இருப்பவர் ரணில் எனும் விடையை பல ஊடகங்கள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தன. மகிந்த தரப்பு கூட்டு எதிர்க் கட்சியும் ரணிலை இறுக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இவர்கள் மாத்திரமல்ல ஐதேகவுக்குள் ரணிலின் எதிரிகளாக நேரம் வரும் வரை காத்திருக்கும் ஒரு சிலரும் இந்த சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்த காத்திருந்தார்கள். நீருக்கடியில் பந்தம் கொண்டு போவது போல ரணிலை மாட்ட தருணம் பார்த்தார்கள்.
ரணில் அரசியல் செஸ் விளையாட்டில் சூரன். இதைத்தான் சிலர் ரணில் நரி என்கிறார்கள். இவருக்கு இந்த ஞானம் 40 வருட பாராளுமன்ற வளாகத்துக்குள் வாழ்ந்தே வந்த அனுபவம்தான். குழி எங்கே மேடு எங்கே என பார்க்கும் திறன் ரணிலுக்கு பிறப்பிலே வாய்ந்துள்ளது என தெரிந்தோர் சொல்வார்கள். நிலத்துக் கீழே நீரோடை தெரியும் ஆள் என பழகியோர் சொல்வார்கள். ரணிலுக்கு தெரியும் தன்னைச் சுற்றி சில சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டு சுத்துகின்றன என்பது. இதிலிருந்து மீளவே இந்த அரசியல் ஆட்டத்தை ரணில் கையிலெடுத்தார்.

ரணில் டெல்லி செல்வதற்கு முன், மைத்ரி டெல்லி சென்று மோதியை சந்தித்திருந்தார். அப்போது மைத்ரி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தருவதாக ஒப்புக் கொண்டு விட்டு வந்தார். அதன் நன்றிக் கடனாக மோடி மைத்ரி என்ன கேட்டாலும் செய்ய காத்திருப்பதாக ஒரு தகவலை சொன்னார். இது ஒரு பெரிய வார்த்தை. இதை அறிந்த ரணில் அரசியல் சதுரங்க விளையாட்டையொன்றை கையிலெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். மைத்ரியின் டெல்லி பயணத்தின் போது துறைமுக விடயம் குறித்து மைத்ரி, ரணிலுக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெரிவிக்காதிருந்தார். அந்த வெற்றியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள, மைத்ரி போட்ட கேம் அது. அது எப்படியோ ரணிலுக்கு தெரிய வந்தது. இதை வேறு விதமாக கையாண்டு மைத்ரியை பலவீனப்படுத்த ரணில் இன்னோரு திட்டத்தை தீட்டினார்.
மைத்ரி இந்தியாவுக்கு காதும் காதுமாக திரைமறைவில் கொடுக்க ஒப்புக் கொண்ட, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு கொடுப்பதற்கான கெபினட் பேப்பர் ஒன்றை தயாரித்து, அதை கெபினட்டில் ரணில் முன் வைத்தார்.அதை மைத்ரி சற்றும் எதிர்பாக்கவே இல்லை. இப்போது அதற்கான அனுமதி வெளிப்படை தன்மையாக அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிர்ந்து போனார் மைத்ரி. தனது திட்டம் வேறு பக்கம் திசை திரும்பியதால் சினம் கொண்டார்.
சாதாரணமாக மைத்ரி போன இடமெல்லாம் மக்களை கவர வாயில் வந்ததை சொல்லும் ஒரு மனிதர். அவர் போகும் இடத்திலுள்ள சனத்தை குசிப்படுத்தி தன்னை ஒரு வீரராக காட்டிக் கொள்வதில் அதிக பிரியமானவர். ஐநாவுக்கு போய் அங்குள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஒன்றை பேசுவார். இன்னொரு இடத்தில் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இன்னொன்றை பேசுவார். அந்த நேரத்தில் அவரது பேச்சு திறனால் பலரைக் கவர்ந்து விடுவார். அது செயல்படுத்த முடியுமா இல்லையா எனும் கவலை அவரிடம் இருப்பதில்லை. அது சாத்தியமா என்பது கூட அவருக்கு கவலையில்லை. இதை பலரும் உணர்ந்துள்ளார்கள். இலங்கையில் தேசியம் பேசுவார். தேசத்தின் சொத்துகளை யாருக்கும் கொடுக்கக் கூடாதென்பார். ஆனால் வெளிநாடு போனால் அவர்கள் என்ன கேட்டாலும் தர சம்மதிப்பார். அங்கு இன்னொரு முடிவு எடுப்பார். நாட்டில் இன்னொன்று பேசுவார். இந்த பலவீனம் அவரிடம் உண்டு. இதை ரணில் நன்கு அறிவார். அதை அறிந்துதான் ரணில் இப்படி கெபினட் பேப்பரை சமர்ப்பித்தார். இதனால் மைத்ரியின் கோபம் உச்சத்தை அடைந்தது. வந்த கோபத்தில் ரணில் ஒப்படைத்த கெபினட் பேப்பரை கையிலெடுத்து கசிக்கி வீசி எறிந்தார்.
இதை கண்டதும் மகிந்த சமரசிங்க எழுந்தார். மைத்ரிக்கு ஆதரவாக பேசுவது போல ரணிலை தாக்கி பேசத் தொடங்கினார். அது ரணிலை தாக்குவது போல இருந்தாலும், அதற்குள்ளாக மைத்ரி இந்தியாவில் கொடுத்த வாக்குறுதியை காயப்படுத்துவதாகவே இருந்ததாம். இது ஒருவரை திட்டுவது போல இன்னொருவரை திட்டும் விதம்.அது புரிந்தோருக்கு மட்டுமே புரியும். இதைத்தான் ரணில் எதிர்பார்த்தார். ரணிலுக்கு தேவையான தீப்பந்தம் வீசப்பட்டு விட்டது. அது நீண்டு கொண்டு போன போது, ரணில் மகிந்த சமரசிங்கவை "shut up and sit" எனச் சொல்லி, அவரது பேச்சை தடுத்துள்ளார். இதுபோதும் என்பதே அதன் அர்த்தம்.
மகிந்த சமரசிங்க உட்கார்ந்ததும், ராஜித்த சேனாரத்ன எழுந்து தொடர்ந்து பேசியுள்ளார். அவருக்கு தெரியும் எங்கே எது பேச வேண்டும் என்பது . நல்லாட்சியின் முக்கிய வகிபாகத்தில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் பேச வேண்டியதை பேசிவிட்டு உட்கார்ந்திருக்கிறார். இங்கே தேவைப்பட்டது. ஒருவரை சினமூட்டி வாயை கிளறுவதாக இருக்கலாம் என்கிறார்கள் அங்கே இருந்த சிலர்.
இந்த வாக்கு வாதங்கள் முத்திக் கொண்டு போன போதுதான் " றோ என்னைக் கொலை செய்ய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் " என்றிருக்கிறார் மைத்ரி. தவளை தன் வாயால் கெடும் நிலைக்குள் இங்கேதான் மைத்ரி விழுந்தார். எங்கேயோ இருந்த குப்பையை தன் தலையில் கொட்டிக் கொண்டார். இதன் பார தூரத்தை மைத்ரி சிறிதும் நினைத்திருக்க மாட்டார். நாலு சுவருக்குள் அடங்கிவிடும் என நினைத்திருப்பார். அது அப்படி நாலு சுவருக்குள் அடங்கவில்லை. இந்த வாக்குவாதங்களை சில கெபினட் அமைச்சர்கள் ஒலி - ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் சிலரது பெயர்கள் வெளியாகியுள்ளது. ஒருவர் மங்கள சமரவீர. அடுத்தவர் மலிக் சமரவிக்கிரம. இன்னொருவர் வஜிர. மேலும் சிலரும் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இவை தெரியாமல் பெறப்படும் சாட்சிகள்.
கெபினட் மீட்டிங் முடிந்தது. ஆனால் ........
இந்த விடயம் உடனடியாக ஐதேகவின் ஆதரவு சிங்கள ஊடகவியளாளர்களுக்கு தகவலாக கசிய விடப்பட்டது. சிலர் அதை பகிர அஞ்சினார்கள். அது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒரு சிலர் நம்பிக்கையின் நிமித்தம், ஏனையவர்களை தொடர்பு கொண்டு பேசி , உறுதி செய்து கொண்டு வெளியிட்டார்கள். அதன் பின்னரே இந்து பத்திரிகை அந்த செய்தியை வெளியிட்டது. இந்து செய்திதான் சர்வதேச மட்டுத்தில் அதிர்ச்சியை கொடுத்தது.
அந்த சூட்டோடு சூடாக ரணில் டெல்லிக்கு பறந்தார். காண வேண்டியவர்களை சந்தித்தார். எமது நாட்டு ஜனாதிபதி கொல்ல றோ சதி செய்கிறதென ஜனாதிபதியே சொல்கிறார் எனும் தீப்பொறியொன்றை மெதுவாக தட்டிவிட்டார். மைத்ரி இலங்கையில் ஊரெல்லாம் போய் எதை பேசினாலும் மக்கள் சிரித்து விட்டு மறந்து போவார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர், இன்னொரு நாட்டின் இறைமைக்கு பங்கம் வரும் விதத்தில் இப்படியான ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வு துறைக்கு எதிராக கெபினட்டில் பேசினால் அது இரு நாடுகளுக்குள் ஒரு மோதலை தோற்றுவிக்கும். அதுவே இங்குள்ள பெரிய பிரச்சனை.
அதை மறைக்க ராஜித்த அப்படி ஜனாதிபதி சொல்லவில்லை என அரச ஊடக சந்திப்பில் சொல்லி பூசி மெழுக முயற்சி செய்தார். அதை சில ஊடகவியலாளர்கள் விடாமல் தொங்கி கேள்வி கேட்டார்கள். அதுபோதாதென இந்து பத்திரிகை ஊடகவியளாளர், நான்கு அமைச்சர்கள் ஊடாக அதை உறுதி செய்த பின்னரே செய்தியை எழுதி அனுப்பினேன் என தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் தனது டுவிட்டர் பகுதியில் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் என அடித்து சொன்னார். இந்து என்பது சர்வதேச மட்டத்தில் அனைவரும் பார்க்கும் மிக முக்கியமான பத்திரிகை. எங்கோ தொங்கிய முட்டி தலையில் கவிழ்ந்தது.
மைத்ரி , தான் விட்ட தவறை உணரும் போது, கேம் ஓவராகும் நிலைக்கு வந்திருந்தது. அவர் மேல் இருந்த இந்தியாவின் அல்லது மோடியின் நன் மதிப்பு கேள்விக் குறியாகியிருந்தது. தவறை உணர்ந்த மைத்ரி, பேசி சரி செய்ய , பல முறை மோடியை தொலைபேசி வழி தொடர்பு கொள்ள முயன்றார். அது தசரா பண்டிகை காலம். அந்த விழாவில், நேரத்தை மோடி கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் உடனடியாக மோடி , மைத்திரியின் தொலைபேசிக்கு வரவில்லை. சினம் கொண்டிருப்பார் அல்லது அடுத்தவர்களது ஆலோசனைக்காக காலம் எடுத்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. அதன் பின்னரே அவர் மைத்ரியுடன் தொலைபேசி வழி பேசினார்.
மைத்ரி நடந்ததை சொன்னார். மைத்ரி சொன்னவற்றை மோடி கேட்டு விட்டு "வார்த்தைகளை கண்டபடி விட வேண்டாம்" எனச் சொன்னதாக சொல்கிறார்கள்.
எது எப்படியோ ஒரு வார்த்தை இரு தேச தலைவர்களை தூர விலக்கியுள்ளது. ஆசியாவின் பலமான புலனாய்வு துறையான றோவின் கோபத்தை மைத்ரி தேவையில்லாமல் சம்பாதித்துள்ளார். ஒருவருக்கு வெட்டிய குழியில் தாமே விழுவதென்பது சில நேரங்களில் மட்டுமே நடக்கும். இதுவும் அதுபோலத்தான்.
அரசியல் என்பது கத்திக்கு மேல் நடப்பதல்ல. கத்திகளுக்கு கீழ் நடப்பது.
- அஜீவன்

கருத்துகள் இல்லை: