வெள்ளி, 26 அக்டோபர், 2018

பிரகாஷ் ராஜ் : மீ டூ புகார் கூறும் பெண்களின் வாயை அடைக்க முயற்சி

மின்னம்பலம் :மீ டூ புகார் கூறும் பெண்களின் வாயை அடைக்க முயற்சி: பிரகாஷ்ராஜ்தற்போது பெண்கள் மீ டூ மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் அர்ஜுன், தியாகராஜன், ராதாரவி, இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ், சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களே இருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ், ஸ்ருதி ஹரிகரன் புகாரின்பேரில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “திரைப்படத் துறையில் பல பெண்களுக்குப் பாலியல் ரீதியான அநீதி இழைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து அவர்கள் புகார் எழுப்பினால் அவர்களை நோக்கியே அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள்.

குற்றம்சாட்டும் பெண்களின் வாயை அடைக்கும் வகையில் பேசுகிறார்கள். `யாருடைய தூண்டுதலின்பேரில் புகார் செய்கிறாய்? அரசியல் பின்னணி உள்ளதா?’ என்று கேள்வி கேட்கிறார்கள். இது அவர்கள் மேற்கொண்டு பேசாமல் வாயை அடைக்கும் முயற்சி.
அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் புகார் அளித்துள்ளார். அனைவரும் ஸ்ருதிக்கு எதிரான கருத்துகளைத்தான் சொல்கிறார்கள். நான்தான் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன். இதுகுறித்து முறையான விசாரணை வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நடிகர் அர்ஜுனின் மருமகன் துருவா சர்ஜா, ஸ்ருதி ஹரிகரன் மீது பெங்களூரு உரிமையியல் நீதிமன்றத்தில் ரூபாய் ஐந்து கோடி இழப்பீடு கேட்டு நேற்று (அக்டோபர் 25) மான நஷ்டஈடு வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கன்னட நடிகர் சங்கம் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு நேற்று அழைத்திருக்கிறார்கள். ஆனால், அது தோல்வியில் முடிந்திருக்கிறது. இதுகுறித்து நடிகர் அர்ஜுன் பேசும்போது, “நான் மட்டுமல்ல; என் குடும்பம், நண்பர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என் மீதான பழியால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் ஏதும் சொல்ல முடியாது. மீ டூ என்பது அருமையான விஷயம். இதைத் தவறாகப் பயன்படுத்தும்போது அதன் உண்மையான நோக்கத்தை இழந்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹரிகரன், “ஒரு பெண் நியாயத்தைப் பேசும்போது அவளே பலிகடாவாக ஆக்கப்படுகிறாள். நம் சமூகம் இன்னும் கீழ்மையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. எனக்கெதிராக என்மீது இரண்டு வழக்குகள் இங்கு பதிவாகியிருக்கிறது. கன்னட நடிகர் சங்கத்தின் மீதான மரியாதையின் காரணமாக வந்திருக்கிறேன். அம்பரீஸ் அவரின் பதிலை நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை: