புதன், 24 அக்டோபர், 2018

ஸ்டாலின் : ஏழு வழக்குகளையும் எதிர்கொள்வேன்

ஏழு வழக்குகளையும் எதிர்கொள்வேன்: ஸ்டாலின்மின்னம்பலம் : திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் விசாரணைக்காகச் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 24) ஆஜரானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஸ்டாலின் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அன்று விசாணைக்கு வந்தது.
அப்போது, ‘‘இந்த வழக்குகள் தொடர்பாக ஸ்டாலின் 2 வாரத்தில் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தொடர்ந்து ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 24) சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “அதிமுக ஆட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், அவரது மறைவுக்குப் பிறகு, தற்போது ஆட்சி செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் என் மீது 7 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் என் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் தவறான குற்றச்சாட்டைச் சுமத்தினார். அது தவறான குற்றச்சாட்டு என்பதால் நானே நேரடியாக டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று, என் மீது பதிவு செய்யப்பட்டது ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் அல்ல, ஃப்ராடு இன்ஃபர்மேஷன் ரிபோர்ட் என்று சொன்னேன் அதற்காக என் மீது ஒரு அவதூறு வழக்குத் தொடரப்பட்டது” என்று கூறினார்.
இரண்டாவதாக செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்த காரணத்தால், சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்தனர். இதற்குக் காரணம் அதிமுக ஆட்சிதான் என்று சொன்னேன். மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் இந்த ஆட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது அதனால்தான் இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்று கூறினேன். அதனால் என் மீது வழக்குத் தொடரப்பட்டது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், இந்த வழக்கில் வேடிக்கையான ஒரு விஷயம் என்னவென்றால், வழக்கு விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான சாட்சியர் பரணிகுமார், 'ஸ்டாலின் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத்தான் அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார். வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார் அதை ஜெயலலிதாவிடம் முறையாகச் சொல்லவில்லை, அதனால்தான் இந்த ஆபத்து ஏற்பட்டது’ என்று கூறியதாக குறிப்பிட்டார்.
அடுத்ததாக, சென்னையில் காலரா நோய் பரவிய நேரத்தில், ஜெயலலிதா லொக்கேஷன் டூர் போயிருக்கிறார் என்று கூறியதற்காக என் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்பட்டது.
நான்காவது வழக்காக, ஜெயலலிதா சென்னை கோட்டையில் இருப்பதை விட, கொடநாட்டில் தான் அதிகம் இருக்கிறார் என்று பேசிய பேச்சுக்காக வழக்குத் தொடரப்பட்டது.
ஐந்தாவதாக, சட்டமன்றத்தில் மேட்டூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மில்லியன் கன அடி என்பதற்குப் பதிலாக மில்லியன் ஜன அடி என்று கூறினார். இதைச் சட்டமன்றத்தில் திமுக எடுத்துப் பேசியதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். எனவே சட்டமன்றத்துக்கு வெளியே வந்து ஊடகத்திடம் எடுத்துச் சொன்னேன். அதற்காக என் மீது வழக்குத் தொடரப்பட்டது.
அடுத்ததாக, திருச்சியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, பல்கலைக் கழக விவகாரங்களை அடமானம் வைக்கக் கூடிய அளவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி உள்ளதாகக் கூறினேன். எனவே என் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வாறு ஏழு வழக்குகள் என் மீது தொடரப்பட்டுள்ளது என்று பட்டியலிட்ட ஸ்டாலின் இந்த வழக்குகளை எந்த நேரத்திலும் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தடா, பொடா, மிசாவை பார்த்தவர்கள் நாங்கள் என்றும் முதல்வர் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீதான வழக்கு உட்பட அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை இருக்கின்ற நிலையில், என் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: