வெள்ளி, 27 அக்டோபர், 2017

பேனர்களில் புகைப்படம் வைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நக்கீரன் : பேனர்களில் புகைப்படம் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீத்மன்றம்  மறுப்பு! உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்தை பேனர்கள், கட்-அவுட்டுகளில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்களைப் பயன்படுத்த தனிநீதிபதி வைத்தியநாதன் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் தடைவிதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த முறையீட்டை அவசர வழக்காக ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து மீண்டும் மனுதாரர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இன்று மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணையானது எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேனர்களில் புகைப்படங்கள் வைக்கக்கூடாது எனக்கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஒருவர் புகைப்படத்தை பேனரில் வைப்பதற்காக அவர் இறக்கும்வரை காத்திருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். குறுக்கிட்ட நீதிபதி, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுவதில் அரசு தரப்பு அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. பலமுறை இதில் மெத்தனம் காட்டிவருகின்றனர். மேலும், பேனர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தனிநீதிபதி விதித்த உத்தரவிற்கு தடைவிதிக்க முடியாது எனக் கூறி வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: